Saturday, September 17, 2011

கட்டாய தியானம் வேண்டாம்

* உலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் இறைவனுடைய கருணை எப்போதும் பொழிந்து கொண்டிருக்கிறது. கருணையைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. தியானத்தை ஒழுங்காகச் செய். இறைவனின் எல்லையற்ற கருணையைப் புரிந்து கொள்வாய். உண்மை அன்பையே கடவுள் விரும்புகிறார்.

* தியானம் செய்ய முடியவில்லை என்றால் ஜபம் செய். ஜபத்தின் வாயிலாகவும் அனுபூதியடையலாம். பாராயணம் தியானம் செய்யும் மனநிலை வருமானால் நல்லது. கட்டாயப்படுத்திக்கொண்டு தியானம் செய்யாதே.

* காற்று எவ்வாறு மெழுகுவர்த்தியின் சுடரை அலைக்கழிக்கிறதோ அதுபோல ஆசைகள் நம் மனத்தை அலைக்கழிக்கின்றன.

*மனிதனுடைய புத்தி நிலையற்றது. இது ஆணியின் பிரிக்கு ஒப்பானது. ஒரு பிரி தளர்ந்து விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது.

* அலைபாய்வது மனதின் இயல்பு. இறைவனின் நாமம் பலன்களைவிட மிகவும் வலிமை வாய்ந்தது. சிலவற்றைச் செய்ய நினைத்து, அதைச் செய்யாமல் விட்டதற்காக கவலைப்படாதே.

* கணவன், மனைவி, உடல் உட்பட அனைத்தும் மாயை. இவை மாயையின் தளைகள். இந்தத் தளைகளில் இருந்து விடுபடும் வரை உன்னால் பிறவிக் கடலைக் கடந்து மறுகரையை அடைய இயலாது.

* இவ்வுடல் தீக்கிரையாகும் பொழுது மிஞ்சுவது ஒரு பிடிச்சாம்பலே. அழகே வடிவாக விளங்கினாலும், வலிமை நிறைந்ததானாலும் இவ்வுடலின் முடிவு சாம்பலாவது தான். இருப்பினும் மக்கள் இவ்வுடல்மீது எவ்வளவு பற்று வைத்துள்ளார்கள்?

* துன்பங்களால் நொந்து கிடக்கும் உன் உள்ளத்தை இறைவனிடம் திறந்து காட்டு நைந்துருகி கண்ணீர் விட்டு அழுதால், படிப்படியாக நீ அமைதி பெறுவாய்.

No comments:

Post a Comment