Saturday, May 30, 2015

கடவுளுக்காக கொடுக்கப் படும் பலி.....

கடவுளுக்காக கொடுக்கப் படும் பலியும் மனிதனுக்காக கொடுக்கப் படும் பலியும் (முக்கிய விளக்கங்கள்):

*இந்து தர்மத்தின் ஆணிவேராக விளங்குவது அகிம்சை. 'அகிம்சா பரமோ தர்ம' (அகிம்சையே உச்ச பட்ச தர்மம்) எனும் பிரமாண வாக்கியத்தை மகாபாரதத்தில் பற்பல இடங்களில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் வியாசர். இந்து தர்மத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் பலரும் ஆலயங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உயிர் பலி இடுகின்றனர்.
*இது போன்ற செய்திகளைக் கேள்வியுறும் பொழுது நம்மில் பலரும் ஆலயங்களில் பலியிடுவோரை மிகக் கடுமையாக நிந்திப்பதைக் காண்கிறோம். எனினும் புலால் உண்பவர்கள் அத்தகைய விமரிசனத்துக்கு உள்ளாவதில்லை. மேலும் பல நேரங்களில் ஆலய பலியினை எதிர்ப்பவர்களே அசைவ வழக்கத்தினை மேற்கொள்பவராக இருக்கின்றனர். இது புதிரன்றோ?.
*
உயிர் பலியிடுபவரோ 'புலால் உண்பதே கொடிய பாவம்' என்றும் புலால் உண்பவரோ 'ஆலயங்களில் உயிர் பலியிடுவதே கொடும் பாவமென்றும்' வாதிடுவர். இதற்கு முடிவு தான் என்ன? எவ்வகையிலும் உயிர்க் கொலை ஞாயமாகாது. தர்மங்களை நம் விருப்பத்திற்கு ஏற்ப வகுத்துக் கொள்வதை விடுத்து அருளாளர்களின் அறிவுரைகளைச் செவி மடுப்பதே நன்மை பயக்கும்.
*
பிள்ளைப் பெரு விண்ணப்பம் - 63,64ஆம் பாடல்கள் (திருவருட்பா 6ஆம் திருமுறை):
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்
-
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திருவுளம் அறியும்!!
*
மேற்குறிப்பிட்ட பாடல்களில் பலியிட எடுத்துச் செல்லப் படும் உயிர்களைக் கண்டு பதை பதைக்கிறார் வள்ளலார். பாடலில் 'குக்குடம்' என்ற பதம் கோழியைக் குறிக்கும். மேலும் மீன் பிடிக்க உதவும் தூண்டில்; வலை இவைகளைக் கண்டால் (அவ்வுயிர்களின் நிலையினை எண்ணி) பயந்து நடுங்குகிறார் வள்ளல் பெருமானார்.
*
நம் நாட்டில் ஆலயங்களில் பலியிடப்படும் பிராணிகள் சுமார் 5 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும், உலக நாடுகள் முழுவதும் சேர்த்து ஒரு ஆண்டுக்கு மனித இனத்துக்காக (உண்ணும் பொருட்டு) பலியிடப் படும் பிராணிகளோ 65 பில்லியன் (அதாவது சுமார் 6500 கோடி பிராணிகள்). மீன் முதலிய நீர் வாழ் உயிரனங்கள் இந்த கணக்கில் சேராது.
*
மேற்கூறிய கணக்கில், மக்கள் தொகை மிகுந்துள்ள மூன்று நாடுகளுள் ஒன்றான பாரத நாட்டின் பங்கு 10 சதவிகிதம் என்று கொண்டாலும் 'எத்தனை கோடி பிராணிகள் மனித இனத்திற்காக வதைக்கப் படுகிறது' என்று எண்ணும் பொழுது உள்ளம் பதைக்கும். 'சரி நான் ஒருவன் இன்று புலாலை நிறுத்தினால் உயிர்க் கொலை நின்று விடுமா ?' என்ற கேள்வி தோன்றுவது இயல்பு.
*
உயிர்க்கொலையை முற்றிலும் ஒழித்து விட முடியாது. உண்மை; எனினும் நம்மை நாம் பாவச் செயலில் இருந்து விடுவித்துக் கொள்ள இயலும். நம்மைக் கருணையுள்ளவராக பரிணமித்துக் கொள்ள இயலும். இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாக்கிக் கொள்ள இயலும். ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார் வள்ளலார் (சிவ சிவ)..

Friday, May 22, 2015

கீழே வந்தவன் திளைத்திருப்பான்

உயரே நிலைக்குமோ விண்ணிழி நீரும், விரைந் திறங்கி மடுவாகும்
உயரே நிற்பவன் தவித்திருப்பான், இறங்கி வந்தவன் திளைத்திருப்பான்
(விண்ணிழி = விண் +இழி வானத்திலிருந்து இறங்கிய. மடு =நீர் நிலை)[falls.JPG]
இந்நிலையில் மேலே இருப்பவன் தவித்திருப்பான் என்று எப்படிச் சொல்வது என சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் மேலே சொன்ன சம்பவம் மிகச் சரியான உதாரணமாகத் தோன்றியது. கவிஞர்கள், ஞானிகளின் சொற்கள் என்றும் பொய்க்காது. நமது புரிந்து கொள்தலில் வேண்டுமானால் முன்பின் முரண் இருக்கலாம் என்பதும் புரிந்தது. உயரே இருப்பவன் இறங்கி ஆகணும்.
இறைவனின் அருள் மழை எல்லோருக்குமாகத் தான் பொழிந்து கொண்டிருக்கிறது.அதை உணர்ந்து அனுபவிக்க முடிபவர்களுக்கு வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே. உணராமல் போனவர்களுக்கு துன்பமே.
உணர்பவர்கள் யார், உணராதவர்கள் யார்?
ஈடுபட்டுள்ள செயலோடு தன்னை கர்த்தாவாக ஐக்கியப் படுத்திக் கொண்டு 'எல்லாம் தன்னால் நடக்கிறது, வெற்றிகளுக்கெல்லாம் தன் திறமையே காரணம் என்று நினைத்துக் கொள்வது; வராமல் போன வெற்றிகளுக்கு பலரிடமும் குறை கண்டு பலரையும் தூற்றிக் கொண்டுத் திரிவது ' இவையே பெரும்பாலும் காணப்படும் உலகினரின் இயல்பு. கபீரின் கண்ணோட்டத்தில் கூற வேண்டுமானால் இவர்கள் 'உயரே' வசிப்பவர்கள். இவர்கள் மனம் கரடுமுரடான பாறைகளால் ஆனது. நம்மில் காணப்படும் போட்டி, பொறாமை பாசாங்கு, இவைகளே அப் பாறைகள். அத் தகைய நெஞ்சங்களுக்கு இறைவனின் அருளைப் போற்றவோ தக்க வைத்துக் கொள்ளவோ நேரமும் அவசியமும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் மனம் வறண்டவர்களாக சுயநலப் போக்குள்ளவர்களாகக் காணப்படுவர். அகந்தையினால் தங்களை மிக உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்ளும் போக்கு உடையவர்கள் இவர்கள். இவர்கள் பொதுவாக நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தேடி அலைவர். இவர்களின் நிலை நீருக்காக தவிப்பவர்களை ஒக்கும்.

கீழிருப்பவர்கள் யார்? இவர்கள் மன அடக்கம் உள்ளவர்கள். யாவரையும் சமமாக பாவிக்கக் கூடியவர்கள். பிறருடைய துன்பத்தைக் கண்டபோது மனம் வருந்தி அவர்களுக்கு உதவி செய்ய விரைபவர்கள். இத்தகைய குணங்களால் அவர்களுக்கு மகிழ்ச்சி இயல்பாகக் கூடுகிறது. தங்களுக்கு இறைவன் அளித்திருக்கும் வளமைக்கு இடைவிடாது ....
 அவர்கள் நன்றிக்குக் காரணம் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வளமைகூட இல்லாது பலரும் வாழ்க்கை நடத்தவில்லையா என்ற எண்ணம் தான். நன்றி பெருகும் மனதில் பிறரை குறைகூறும் குணம் இருக்காது. குறைகளை காணா மனம் மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன அறியும். அதுவே இறைவனின் கோவில் ஆகிறது. அவர்கள் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்கள். அடக்கமுடையவரின் மனநிலையை இராமலிங்க அடிகள் அழகாக எடுத்துரைக்கிறார்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளம் தான் சித்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்து கொண்டேன் அவ்
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட
என் சிந்தை மிக விழைந்ததாலோ

எளியார்க்கு ஏவல் செய்ய விரும்பும் மனம் இன்னும் எத்தனை எளிமையானதாக இருந்திருக்க வேண்டும்.
மகிழ்ச்சியைத் தேடி அலைவோருக்காக சொல்லியிருக்கும் கபீரின் உதாரணம் மிக எளியது. யாவரும் புரிந்து கொள்ளக்கூடியது.