Tuesday, October 19, 2010

பதிலா உயிரா? - தினம் ஒரு ஸென் கதை

ஒரு நாள் எல்லாராலும் உயர்வாக கொண்டாடப் பட்ட சா'ன் ஆசிரியர் ஷிஷைன் தன்னுடைய சீடர்களை சோதித்து பார்ப்பது என முடிவெடுத்து, "உண்மை வழியினை அடையத் தேடும் போது, ஒரு உயரமான மரத்தின் கிளையினைப் பல்லால் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு சமமாவோம்" என்றவர், "கீழே சவகாசமாக அமர்ந்திருக்கும் மற்றொரு மனிதன், மேலேத் தொங்கிக் கொண்டிருக்கிறவனைப் பார்த்து, 'மேற்கிலிருந்து போதிதர்மா சைனாவிற்கு வந்ததன் காரணம் என்ன?' என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது மேலேயிருப்பவன் பதில் சொல்லவில்லையென்றால் முட்டாளாக கருதப் படுவான். ஆனால் வாயைத் திறந்தாலோ எமனுக்கு இரையாகிவிடுவான். சொல்லுங்கள், இதிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்.

அங்கிருந்த சீடர்களில் ஒருவனது பெயர் ஹு டோ சாவோ, அவன் எழுந்து நின்று, "எங்களுக்கு அந்த மனிதன் உயரமான மரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் பற்றியக் கவலையில்லை. எங்களுக்குத் தேவையானதெல்லாம் யார் அவன், மரத்தின் மேலே ஏறுவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று பதிலுக்கு ஆசிரியரைப் பார்த்துக் கேள்வி கேட்டான்.

அவன் கூறியதைக் கேட்ட ஷிஷைன் அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினார். சீடனின் பதிலில் திருப்தி அடைந்தவரானார்.

Monday, October 18, 2010

ஆன்மீக ஞானம்.....


ஒரு இருள் சூழ்ந்த இடத்தில் ஒரு ஒளிவிளக்கை கொண்டு சென்றால் எவ்வாறு உடனே இருள் விலகுமே அது போல ஆன்மீக ஞானம் ஒரு மனிதனின் வாழ்வில் வந்தவுடன் சூரியனைக் கண்ட பனி  போல எல்லா அறியாமைகளும் விலகி விடும். அதை செய்விக்க அந்த எல்லாம் வல்ல சிவத்தால் ஆகுமேயன்றி வேறு ஒருவராலும் இயலாது.

Saturday, October 16, 2010

விசித்திரமான துறவி - தினம் ஒரு ஸென் கதை

ஓபாகு ஸென் பிரிவினைச் சேர்ந்தவர் ஸென் துறவி ஏன்சூ. மரபுகளை ஏற்றுக் கொள்ளாத விசித்திரமான துறவி. தனியாக வசித்தார். ஒரிடத்தில் தங்கியிருக்க மாட்டார். எங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கு செல்வார். என்ன செய்ய வேண்டும் என்று பிரியப் படுகிறாரோ அதைச் செய்வார்.

ஒரு சமயம் ஏன்சூ ஜப்பானின் பழைய தலை நகரான கியோடோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினைச் சந்திக்கச் சென்றார். ஏதோ ஆரவரத்தில் சிந்தனை வயப்பட்டவராக தான் எங்கு செல்கிறோம் என்பதினையே மறந்து விட்டார் ஏன்சூ. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தவர், ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, "இந்த வீட்டிற்கு தான் ஏன்சூ வருவதாக கூறியிருந்தாரா?" என்று ஒவ்வொருவரையும் கேட்கலானார்.

மற்றொரு சமயம், ஒரு புத்தகத்திற்கு முகவுரை எழுதச் சொல்லி ஏன்சுவிடம் ஒருவர் கேட்டுக் கொண்டார். ஏன்சூவும் அவருடைய கோரிக்கையினை ஏற்று முகவுரையினை எழுதிக் கொடுத்தார். அந்த முகவுரைத் தாளில் இருந்த மோசமான தெளிவில்லாத கிறுக்கல் கையெழுத்தினைப் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. தெளிவில்லாத கையெழுத்தினைக் ஏன்சூவிடம் காட்டி அது என்ன என்று கூறுமாறு எழுதச் சொன்னவர் கேட்டார்.

ஸென் துறவியான ஏன்சூ மறுபடி மறுபடியும் தான் எழுதியதைப் படித்துப் பார்த்தார். ஏதோ கண்டு பிடித்தவராக முடிவில் "என்னாலும் இதனை படிக்க முடியவில்லை. என்னுடைய மாணவர்களில் ஒருவன் என்னுடையக் கையெழுத்தினைப் படிப்பதில் கெட்டிக்காரன் - ஏன் நீங்கள் அவனிடம் காட்டி என்ன எழுதியிருக்கிறேன் என்றுக் கேட்கக் கூடாது" என்றார்.

Friday, October 15, 2010

அன்புதான் இனிய மருந்து

இறைவனுடன் பொருந்தியிருப்பது ஒன்றே உண்மையான இன்பம். அந்த இன்பத்தோடு பொருந்தியிருப்பதே உண்மை வாழ்வு. அதுவே இன்ப வாழ்வாகும்.
ஒருவன் உயர் வாழ்க்கையை எய்த வேண்டுமாயின் தன்னலம் போல பிறர் நலத்தையும் கருதல் வேண்டும். பிறர் நலத்துக்காக செயல்படுதல் போற்றப்படும் உயர் தன்மையாகும்.  எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதே மனித வாழ்வின் சிறப்பம்சம் ஆகும். ஒருவனுக்கு உண்மை உயர்வு என்பது தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களுக்கும்
நன்மை செய்தலாகும்.  நாம் எல்லோரும் இறைவனுக்கு கடன்காரர்கள்.
நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவு யாவும் இறைவன் நமக்கு பிரதி பலன் கருதாமல் அளித்தவையே ஆகும்.  எல்லாம் வல்ல இறைவன் தாயினும் மிகுந்த பரிவோடு தன்னைப் பாதுகாப்பதை உணர
உணர ஒருவன் எல்லோருக்கும் அன்பு செய்வதையே சிறந்த பணியாகக் கொள்வான்.
எல்லோருடனும் அன்பு செய்யச் செய்ய அவ்வன்பினால் பயன்
பெற்றவர்களுடைய உவகையும் புகழ்ச் சொல்லும் ஒருவனுக்கு
மேலும் மேலும் அன்பு செலுத்துதற்கு ஊக்கம் அளிக்கும்.
நாம் எல்லோரும் எங்களுடைய மனப் பான்மையை உயர்த்திக் கொண்டால் அன்பு செலுத்துதல் எளிதாகும். நம் வாழ்கையில் நம் அறிவு தெளிவாய்
இருக்கும் போது பிறர்க்கு அன்பு செய்தலின் சிறப்பு நமக்கு இனிது விளங்கும்.  எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்திய
பெரியார்களைப் பின்பற்றி நடப்பதால் அன்பு செலுத்துதல் எளிதாகும்.

அன்பே சிவம்

உலகயியலுடன் எங்களை இணைப்பதும் அன்புதான். இறைவனின் திருவடியை அடைய வைப்பதும் அன்பு தான் என்பதை ஒவ்வொரு மானிடனும் நினைந்து ஒழுகினால் உலகமே அன்பு மயமாகி விடும்.  அன்பு மயமாக எண்ணத்திலும், விருப்பத்திலும், சொல்லிலும், செயலிலும் நாம் ஆகி விடுவோமானால் நாம் உலகத் துன்பத்தினின்றும் விடுதலை பெற்று உண்மை இன்பத்தை நுகரும் பெரு வாழ்வு பெறுவோம்.
" அன்பே சிவம்"  "ஜீவ சேவையே சிவ சேவை"  "மானிட சேவையே மகேஷ்வர சேவை"  என்கிற குறிக்கோள் கலந்த எண்ணம் எங்கள் எல்லோருக்கும் வரவேண்டும்.  சிவனுக்கு என் சேவை முழுதுமாக சமர்ப்பணம்.

.   

வாழ்வு

"இன்றைய நாள் உனக்குப் புதிய பிறப்பு, சிறந்தது. சாதனையைத் துவக்கு! கடந்த காலத் தவறுகளை இரு கரம் குவித்து வழியனுப்பி விடு! புதியவனாய் தூய்மையானவனாய் இப்பொழுது துவக்கு.  கடந்த காலத் தவறுகளினால் நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டு விட்டாய், ஆகையால் உன் ஆன்மீகப் பாதையில்
இப்பொழுது புதிய தெம்புடன், நம்பிக்கையுடன், புதிய உறுதியுடன், விழிப்புடன் முன்னேறு"       

முன்னோக்கிய பார்வை

நமது வாழ்க்கை முறை, வாழ்கையின் நோக்கம், இவற்றை நாம் ஆராய்ந்து கொள்ள வேண்டும். நல்ல நல்ல செயல்கள் மூலம் நன்மைகளைப் புண்ணியங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். இறைவனுடன் கலப்பதற்கு நாம் மேற்கொண்டிருக்கும் பயணம் இதனால் துரிதப் படுத்தப்படும்.
இறைவனை அடையும் முயற்சி தொடுவானத்துக்கும் அப்பால் தேடுவது போன்றது. அதே நேரத்தில் இதயத்துக்குள் தேடுவோமானால் இறையருளை
 நெஞ்சத்திலேயே  உணரப் பெறலாம். அந்த இறைவனை நாடிச் செல்லும்
முயற்சிக்கும் வரம்புகிடையாது.  
அந்த இறை ஞான மெய்   ஒளியை நம் இதயத்திற்குள் நிறுத்தி, அதன் கட்டளைப் படி இயங்க ஆரம்பித்தோமானால் நம் வாழ்க்கையும் பயனுள்ளதாய்ப் பிரகாசமடையும் என்பது உறுதி. 

சுபம்!!!

என்னைத் தன் சேவையால் தன் வசமாக்கித் தன்பால் ஈர்த்துக் கொண்ட என் அன்புத் தாய் "அன்னை திரேசா"

வாழ்க்கை என்னும் சாக்கடையில் தான் எல்லோரும் உழன்று கொண்டிருக்கின்றோம். சிலரது கண்கள் மட்டுமே நட்சத்திரங்களில் லயிக்கின்றன.  இப்படியான வாழ்வில் நின்று கொண்டு அன்னை திரேசா என்ன செய்தார் என்று நோக்குவோம்.
அன்னை திரேசாவிற்கும் ஒரு காட்சி ஏற்பட்டது. இந்த எதிர் மறை நிகழ்வுகளுக்கு ஏது பதிலடி?  ஆழமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். " மற்றவர் உனக்கு எதிராகத் தீமை செய்தால் அவர்களுக்கு எதிராக நீயும் செயல்படு" என்றார். அன்னை திரேசாவை கடவுளாக்கிய ஒரே ஒரு வரி இது தான். இந்த வரியைப் பார்த்தவுடன் அடிக்கு அடி, குத்துக்கு குத்து, வெட்டுக்கு வெட்டு என்று எண்ண வேண்டாம். மற்றவர் நமக்கு எதிராகத் தீமைகள் செய்தால், அது போல் தீமைகளை செய்யக் கூடாது. தீமைக்கு எதிர் என்ன? அது தான் நன்மை.   மக்களில் நன்மை செய்யத் தெரியாது, தீமை செய்வோருக்கு எதிராக நாம் நன்மைகளை செய்ய வேண்டும் என்றார்.
தன் கருத்தில் உறுதியாக இருந்தார். எந்தச் சுய நலன்களும் இல்லாமல் தன்னைத் துறவியாக்கினார்.  தீமைகளே வடிவாக நிற்கும் இந்த உலகத்திற்கு எதிராக நன்மையையே செய்வதென முடிவு செய்தார்.   நன்மையை மட்டும் செய்யும் ஒரு மாபெரும் உலகப் போரை அவர் பிரகடனப் படுத்தினார்.  தெய்வம் அவரிடம் வந்தது. 
அவருடைய கை பட்டு  பலருடைய நோய் குணமாகியது.  சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களில் உலகம் முழுவதும் தெய்வப் பிறவியாக ஏற்றுக் கொள்ளப் பட்டவர்களில் அவரும் ஒருவர்.
எனவே தான் இந்த உலகத்தில் நமக்கு யாருமே இல்லையென  ஒரு போதும் எண்ணிவிடக் கூடாது.  நன்மை செய்யும் போரைத் தொடங்கினால் உலகில் உள்ள எல்லோரையும் வெற்றி கொள்ள முடியும். நமக்கு யாருமே துணையில்லை என்று விரக்தியடைவது  மாபெரும் தவறு.  "நாம்  யாருக்குத் துணையாக இருந்தோம் என்று எண்ணுவதே சிறந்தது. 
தத்துவத்தின் முடிவிலும் வாழ்வின் முடிவிலும் எதுவும் இல்லை. இப்போது கையில் இருக்கும் இந்த வாழ்வு மட்டும் தான் நிஜமானது. அதை ஒரு போதும் நம்பிக்கை வரட்சிக்குள் தள்ளி விடக் கூடாது.
உலகத்தில் தோல்வி இல்லாத வெற்றி மட்டுமே உள்ள ஒரு  விடயம் உண்டென்றால் அது நன்மை செய்யும் போர் தான்.  அந்தப் போரைச் செய்பவருக்கு
உலகம் விரக்தியானது அல்ல.  அன்னை சொன்ன ஒரே ஒரு தத்துவம் அது தான்.
ஆயிரம் சொற்களைச் சேர்த்தாலும் ஒரு செயலைப் போல பயனளிப்பதில்லை.  அடுத்தவர்களுக்கு உதவுங்கள்.  நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அது மற்றவர்களை மகிழ்விப்பதன் மூலம் மட்டுமே அது முடியும்.

நாளை என்பது நம் கையில் இல்லை. நல்லவை நினைத்தால் அக்கணமே அவற்றைச் செய்யத் தொடங்குக.

நமது உணர்வுகளைக் கட்டுப் படுத்தக் கூடிய வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.   உலக பந்தங்களை படிப்படியாக குறைத்துக் கொண்டு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளும் போது  நமது  மனச் சாட்சி நமக்கு உற்ற தோழனாகி விடுகின்றது.    நமது மனச் சாட்சிக்கு ஆதிக்கம் கொடுத்து ஆளச் செய்தோமானால் நலன் பெறுவோம்.   நம்மை நாமே உயர்த்திக் கொள்கிறோம் என்பதில் சிக்கல்கள் உண்டு.  அதனை நாம் விவேகமாக சமாளிக்க வேண்டும்.   நம்மைக் காத்துக் கொள்ள சிறந்த உபாயங்கள் தேவை என்பதை நாம் உணர வேண்டும்.
உரிய பாதையில் நாம் செல்லும் போது தன்னலம் அற்றவர்களாகவும் உலகப் பொது நலனுக்குப் பாடுபடுபவர்களாகவும் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். நமது பிரார்த்தனைகளும் பொது நலன் கருதுவதாகவே இருக்க வேண்டும்.   நமது எண்ணங்களே நமது செயலுக்கு காரணம். ஆதலால் நம்முடைய எண்ணங்களை உயர்ந்த வழியில் செலுத்த வேண்டும்.   அன்பு நெறியில் நாம் நடக்கத் தொடங்கிவிட்ட பின்னர் வாழ்கையில் ஏற்படும்
ஒவ்வொரு அனுபவமும் நம் ஆன்மீக வளர்ச்சிக்கு அவசியமானதாகவும்
பயனுள்ளதாகவும் இருக்கும்.

"Aum namo Bhagavathe Sri Ramanaya" 'பிரார்த்தனை'

' தெய்வீகமே குன்ற, நாகரீகப் பேய் தலை விரித்தாடும் இக் கலியுக காலத்தில், சாதுக்களைக் காத்தருளி உலகத்தை உய்விக்கவும் பாபாத்மாக்களைக் கருணையுடன் கரையேற்றவும்,    அழகு-சுந்தரர் 
புத்திரனாய்த் திருச்சுழி ஷேத்திரத்தில் அவதரித்து, அருணாச்சலத்தில் காரண ரூபமாய் விளங்கும் பரந்தாமா!  

உங்களைப் போலவே மார்கழி 30 இல் அவதரித்த பாக்கியம் எனக்குக் கிடைத்திட்டதும்,  இப் பிறவியில் எனக்கு ஞான சொரூபனாகிய உங்களது பிரத்தியஷ தரிசனமும் கிடைத்ததைப் பற்றியும்,   அளவிலா ஆனந்தத்தில் மூழ்கின்றேனே தவிர,   நான் பூர்வ ஜன்மத்திலேயே  முக்தியடையாமல் மீண்டும் இந்த ஜன்மம் எடுத்ததைக் குறித்து 
சற்றும் மனக் கிலேசம் அடையவில்லை.  நான் என்னை அறியாமல் செய்த குற்றங்களைப் பொறுத்து,  என் மன எண்ணங்களை அடக்கி,  இம்மை மறுமைகளில் என் வாழ் நாளைச் சுகப்படுத்தி மோட்ஷ  சாம்ராஜ்யம் அளித்து அருளுமாறு,  திருவேங்கட ரமணா!  
உங்களைப் பிரார்த்திக்கின்றேன். 
என் இதயத்தில் எப்பொழுதும் குடிகொண்டிருக்கும் உங்களை
 அனுதினமும் ஹ்ருதய பூர்வமாய் துதித்து  நமஷ்கரிக்கின்றேன். 
"முக்திக்கு எளியது அருணாச்சலம்;  சாதனத்தில் சிறந்தது ஆத்மா விசாரம்;
உபதேசத்தில் வலியது மோனம்; 
குருவில் சிறந்தவர் என் இதய ரமணன் " 



எல்லோருக்கும் மங்களம் உண்டாகுக!

ஓம் சாந்தி!  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என் குரு ரமணருக்கு சமர்ப்பிக்கின்றேன்

"அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும்  எதிர்பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்"     'ரமணி'


May the world be blessed for long with the feet of Guru Ramana who abides as silent Principle, which absorbes all of us and remains by itself as the root of the three principles. (Soul, World, and Iswara) Spiritual Instructions.
Sri Ramanarpanam Astu!

சித்தர் வணங்கும் தெய்வம் "வாலை"

முக்கோண மூல சுழி தற்கோணமாகி      
முதலான மூல மணி வாலை தண்ணில்
நாற் கோண நாலு வகை நயந்து காக்க 
நாயகியாள் பரஞ்சோதி நாட்டமுற்று 
தீக்கோணத்  திக்குத் திசையிருந்த மாயம் 
தெரிந்திடவே உரைத்திட்டேன்  விவரமாக 
தாக்கோண  விட்ட குறை வந்ததென்றால் 
தனியிருந்து பார்த்தவனே சித்தனாமே!

   

                

எது உண்மைக் கல்வி?

இளைமை முதல் எமது உண்மை ஸ்வரூபத்தினை பலவித முகமூடிகளை கொண்டு மறைத்த வண்ணமே வாழ்ந்து வருகிறோம். எம்மை புற உலக தேவைகளுக்கு ஏற்றவாறு எப்படி தயாற்படுத்திக் கொள்வது என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. எமது குடும்பமும் நண்பர்களும் சமூகத்தில் எப்படி நடக்கவேண்டும் என்பதனை கற்று தருகின்றனர். எமது கல்வி முறைகள் பணத்தையும் பௌதிக தேவைகளை பெறுவது எப்படி என்பது பற்றியும் சொல்லித்தருகிறது. இந்த பௌதீக கல்வி மூலம் பணத்தை சம்பாதிப்பது எப்படி? சமூகத்தில் எப்படி மேலான அந்தஸ்திற்கு வருவது என்பது பற்றியே சதா சிந்தித்து போராடி வருகிறோம்.

ஆனால் மிக அரிதாக சிறிதளவான நபர்களே தமது அகவாழ்க்கை, ஆற்றல்களை அறிவதற்கும், பெறுவதற்கும் முயற்சித்து வருகிறார்கள். இந்த அக ஆற்றலை அறிந்தவர்களே தெய்வீக ஞானம், ஆழ்மன சக்தி, சுயசிந்தனை, தன்மதிப்பு, சூஷ்ம சக்திகள், ஆன்மீக வளர்ச்சி பெற்று வருகிறார்கள். இவற்றை பெறுவதற்கான சுயம் எம் அனைவரிலும் எப்போதும் நித்தியமாக இருக்கும் ஆன்மாவாகும். இதன் குரலை கேட்பவர்கள் ஆன்ம வாழ்வில் படியெடுத்து வைக்கிறார்கள். இதற்கான வழி முறைகள் காலம் காலமாக எல்லாவித கலாச்சாரங்களிலும் இரகசியமாக குரு பரம்பரை மூலம் பரப்ப பட்டு வருகிறது. இந்த குருபரம்பரையினை பூர்வ புண்ணியமாக தொடர்பு கொண்டவர்கள் இன்று வரை இந்த உலகில் குப்த யோகிகளாக இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். யார் தமது உள்ளுணர்வின் குரலை மதித்து  உண்மையான அகவாழ்க்கையினை வாழ விரும்பி தாகம் கொள்பவர்களுக்கு இந்த அதி சக்தி வாய்ந்த தெய்வ உதவி கிடைத்த வண்ணமே இருக்கிறது.
துன்பம் நிறைந்த வாழ்க்கை
வாழ்வு என்பது பல்வேறு சவால்களை கொண்ட துன்பம் நிறைந்த ஒன்று, அமைதியான அன்பு நிறைந்த குடும்ப வாழ்க்கை, வெற்றி நிறைந்த தொழில், பாதுகாப்பான செல்வம், நோயற்ற வாழ்க்கை இவற்றை பெறுவது என்பது மிகுந்த சவாலானது. இன்றைய ஆன்மீக ஆசான்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் இதற்கான பதிலாக பூர்வ கர்மம், ஒருவன் செய்த பாவம் என்பவற்றை காரணம் சொல்லி சமாதானமடைகின்றனர். அப்படியானால் இவற்றை வழியே இல்லையா என சோர்வடைந்து வருந்தி மேலும் மேலும் துன்பத்தினை தமக்கு வருவித்துக்கொள்கின்றனர். ஆன்மிகம் என்றவுடன் பலவித ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் என்பவற்றை போதித்து அனைவரிலும் தாழ்வு மனப்பான்மையினை உருவாக்கி தம்மை பெரியவர்களாக்கி கொள்ளும் உளவியல் உத்திதான் இன்றைய ஆன்மீக ஆசான்களிடம் காணப்படுகிறது.
உண்மை ஆன்மீகம் என்பது தன்னை அறிந்து தனது உள்ளுணர்வை தொடர்பு கொண்டு, தன் உள்ளுனர்விடமிருந்தே எல்லாவித பிரச்சனைகளுக்கும் பதிலை பெற்று வாழ்வின் சவால்களை எதிர் கொண்டு வெற்றி கொள்வது!

இத்தகைய கல்வியே மனிதனுக்கு தேவையான உண்மைக்கல்வி! 

நாயன்மார்கள் அறுபத்துமூவர்..

சிவநெறி பூண்ட நாயன்மார்கள் 

முற்காலத்தில் (~கி.பி 400-1000) தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இவர்கள் அறுபத்துமூவராவர்.

1 அதிபத்தர் 
2 அப்பூதியடிகள் 
3 அமர்நீதி நாயனார் 
4 அரிவட்டாயர் 
5 ஆனாய நாயனார் 
6 இசைஞானியார் 
7 இடங்கழி நாயனார் 
8 இயற்பகை நாயனார் 
9 இளையான்குடிமாறார்
10 உருத்திர பசுபதி நாயனார் 
11 எறிபத்த நாயனார் 
12 ஏயர்கோன் கலிகாமர் 
13 ஏனாதி நாதர் 
14 ஐயடிகள் காடவர்கோன் 
15 கணநாதர் 
16 கணம்புல்லர் 
17 கண்ணப்பர் 
18 கலிய நாயனார் 
19 கழறிற்ற்றிவார் 
20 கழற்சிங்கர் 
21 காரி நாயனார் 
22 காரைக்கால் அம்மையார் 
23 குங்கிலியகலையனார்
24 குலச்சிறையார் 
25 கூற்றுவர் 
26 கலிக்கம்ப நாயனார் 
27 கோச் செங்கட் சோழன்
28 கோட்புலி நாயனார் 
29 சடைய நாயனார் 
30 சண்டேஸ்வர நாயனார் 
31 சத்தி நாயனார் 
32 சாக்கியர் 
33 சிறப்புலி நாயனார் 
34 சிறுதொண்டர் 
35 சுந்தரமூர்த்தி நாயனார் 
36 செருத்துணை நாயனார் 
37 சோமசிமாறர்
38 தண்டியடிகள் 
39 திருக்குறிப்புத் தொண்டர் 
40 திருஞானசம்பந்தமூர்த்தி
41 திருநாவுக்கரசர் 
42 திருநாளை போவார் 
43 திருநீலகண்டர் 
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் 
45 திருநீலநக்க நாயனார் 
46 திருமூலர் 
47 நமிநந்தியடிகள் 
49 நின்றசீர் நெடுமாறன் 
50 நேச நாயனார் 
51 புகழ்சோழன் 
52 புகழ்த்துணை நாயனார் 
53 பூசலார் 
54 பெருமிழலைக் குறும்பர் 
55 மங்கையர்க்கரசியார்
56 மானக்கஞ்சாற நாயனார் 
57 முருக நாயனார் 
58 முனையடுவார் நாயனார் 
59 மூர்க்க நாயனார் 
60 மூர்த்தி நாயனார் 
61 மெய்ப்பொருள் நாயனார் 
62 வாயிலார் நாயனார் 
63 விறன்மிண்ட நாயனார்

சாமுராயும் மரமும் - தினம் ஒரு ஸென் கதை

தன்னை உயர்வாக மதித்துக்கொள்ளக் கூடிய ஒரு சமுராய் போர் வீரன் ஸென் ஆசிரியர் ஒருவரை சந்திக்கச் சென்றான். சமுராய் போர் வீரன் தன் வீர தீரச் செயல்களால் மக்களிடத்தில் புகழும் செல்வாக்கும் பெற்றவன். ஸென் ஆசிரியரின் தோற்ற அழகினையும் இனிய பண்பும் அருள் நிறைந்த மனத்தினையும் பார்த்தவன் தீடிரென தன்னை தாழ்வு மனப்பான்மையுடன் நினைக்க ஆரம்பித்தான்.

ஆசிரியரினை நோக்கிய சாமுராய், "கொஞ்சம் நேரத்திற்கு முன்பு வரை நன்றாக இருந்த நான் திடிரென எதற்காக என்னைத் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்கிறேன்? உங்களது இருப்பிடத்திற்கு வந்ததும் ஏன் நான் என்னைத் தாழ்வாக நினைக்க வேண்டும். இதற்கு முன்பு எனக்கு இந்த மாதிரியான மனநிலை வந்ததில்லையே. நான் சாவினையே பலமுறை மகிழ்ச்சியுடன் சந்தித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஏன் நான் பயப்பட வேண்டும்?" என்று கேட்டான்.
ஆசிரியர், "பொருத்திரு. எல்லாரும் இங்கிருந்து சென்றதும் உனக்கு பதில் சொல்லுகிறேன்" என்றார்.
பலரும் ஆசிரியரைப் பார்க்க வருவதும் போவதுமாக இருந்தனர். காத்திருப்பதினாலேயே களைப்படைந்து சோர்ந்து போனான் சாமுராய். மாலையானதும் அனைவரும் சென்று விட்டனர். சாமுராய், "இப்பொழுது உங்களால் என் கேள்விக்கு பதில் அளிக்க முடியுமா?" என்று கேட்டான்.
ஆசிரியர், "வெளியே வா" என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டு திறந்த வெளிக்குச் சென்றார். அது ஒரு பௌர்ணமி நாள். தொடுவானத்திலிருந்து முழுநிலவானது மறைகின்ற கதிரவனின் ஒளிபட்டு அழகுடன் சிவந்து ஒளிர்ந்தது. "அங்கே தெரிகின்ற மரங்களைப் பார். அதோ அந்த மரமானது வானத்தை தொட்டுவிடும் உயரத்திற்கு வளர்ந்திருப்பதைப் பார். அதன் பக்கத்திலியே இன்னொரு சிறிய மரம் வளர்ந்திருப்பதைப் பார். என்னுடைய ஜன்னலின் வழியாக பல வருடங்களாக அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவைகளுக்குள் எந்த பேதமும் இருந்ததில்லை. அந்த சின்ன மரம், பெரிய மரத்தினைப் பார்த்து 'ஏன் தாழ்ந்து போனவனாக என்னை நினைத்துக் கொள்கிறேன்?' என்று ஒரு பொழுதும் கேட்டதில்லை. இது சிறிய மரம், அது பெரிய மரம், ஏன் அவைகளுக்குள் காதோடு காதாக குசுகுசுவென பேசியதை என்னால் ஒரு நாளும் கேட்க முடியவில்லை?" என்றார்.

சாமுராய், "ஏனேன்றால் அவைகள் தங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை"

ஆசிரியர் சாந்தமான குரலில், "நீ என்னிடம் பதிலினை எதிர் பார்க்க வேண்டாம். உனக்கே பதில் தெரிந்திருக்கிறது" என்றார்.

தண்ணீரின் மேல் நடப்பது - தினம் ஒரு ஸென் கதை

மூன்று துறவிகள் சேர்ந்து தியானம் புரிவது என முடிவெடுத்தனர். ஏரியின் ஒரு கரையில் உட்கார்ந்து கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒருவன் தீடிரென எழுந்து "என்னுடைய பாயை எடுத்து வர மறந்து விட்டேன்" என்று சொல்லி விட்டு எழுந்து சர்வ சாதரணமாக ஏரியின் மீதுள்ள தண்ணீரில் நடந்து மறுகரையில் இருந்த தன்னுடைய குடிசைக்கு சென்றான்.

அவன் திரும்பிய போது, இரண்டாவது துறவி எழுந்து நின்று, "நான் என்னுடைய உள்ளங்கியை உலர்த்த மறந்து விட்டேன்" என்று கூறியவன் ஏரியின் ஒரு பக்கத்திலிருந்து மறுகரைக்கு தண்ணீரின் மீது நடந்து சென்று துணிமணிகளை உலர்த்தப் போட்டு விட்டு எந்தக் கடினமும் இல்லாமல் திரும்பி வந்தான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மூன்றாவது துறவி தன்னுடைய தியானம் மற்றும் தவ வலிமையும் சோதித்து பார்த்து விடுவது என முடிவெடுத்தான். "உங்களுடைய பயிற்சி என்ன என்னை விட சிறந்ததா? நானும் உங்களுக்கு சளைத்தவன் அல்ல, நீங்கள் செய்வது போல் என்னாலும் செய்ய இயலும்" என்று சத்தமாக அவர்களைப் பார்த்துக் கூறியவன் வேகமாக ஏரியிலிருந்த தண்ணீரை நோக்கி ஒடினான். அவனும் மற்ற துறவிகளைப் போல் தண்ணீரில் நடக்க முயற்சித்தான். ஆனால் "தொபிர்" என்ற சத்தத்துடன் ஏரிக்குள் இருந்த தண்ணீருக்குள் விழுந்தான்.

முயற்சியில் சிறிதும் தளராமல் தண்ணீரில் இருந்து எழுந்தவன், மறுபடியும் தண்ணீரில் நடப்பதற்கு முயற்சித்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தண்ணீருக்குள் விழுந்து முழுகினான். இது போல் கொஞ்ச நேரம் நடந்து கொண்டிருந்ததை மற்ற இரண்டு துறவிகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து, இரண்டாவது துறவி முதல் துறவியைப் பார்த்து, "நீ என்ன நினைக்கிறாய்? தண்ணீரில் எங்கு பாறைகள் இருக்கிறது என்பதனை சொல்லலாமா? வேண்டாமா?" என்று புன்முறுவலுடன் கேட்டான்.

புறவுணர்வா அகவுணர்வா? - தினம் ஒரு ஸென் கதை

ஹோகன் ஒரு ஸென் ஆசிரியர், சைனாவின் ஒதுக்குப் புரமான கிராமத்தில் இருந்த ஒரு சிறிய கோயிலில் தனியாக வசித்து வந்தார். ஒரு நாள் அந்த வழியாக பயணம் செய்து கொண்டிருந்த நான்கு புத்த மடத்துறவிகள் அவரிடம் வந்து அனுமதி பெற்று அந்தக் கோயிலின் கொல்லைப் புரத்தின் ஒரு ஓரத்தில் நெருப்பு மூட்டி தங்களது கைகளை மிதமான சூட்டில் காட்டி வெதுவெதுப்பாக்கி குளிரின் பிடியிலிருந்து மீள தங்கள் உடம்பினை கதகதப்பாக்கிக் கொண்டிருந்தனர்.
நெருப்பு மூட்டிக் கொண்டே தங்களுக்குள் உள்ளுணர்வு (மனத்தினால் அறியக் கூடிய தன்மை) மற்றும் புறவுணர்வு (புலன்களால் அறியக் கூடிய தன்மை) பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தனர். ஹோகன் அவர்களின் விவாதத்தில் கலந்து கொண்டு, "அங்கே ஒரு பெரிய கல் இருக்கிறது. அந்த கல் உங்கள் மனதின் உள்ளே இருப்பதாகக் கருதுவீர்களா? அல்லது வெளியே இருப்பதாகக் கருதுவீர்களா?" என்று கேட்டார்.
ஒரு துறவி, "ஒரு புத்தத் துறவியின் கோணத்திலிருந்து எல்லாமே மனதினால் அறியப் பட்டக் காட்சிப் பொருளே, அதனால் நான் கல்லானது மனதின் உள்ளே இருக்கிறதாகவே எடுத்துக் கொள்வேன்" என்று தனது கருத்தினைக் கூறினார்.

அதனைக் கேட்ட ஹோகன், "நீங்கள் எப்பொழுதும் இவ்வளவு பெரிய கல்லினை உங்களது மனதில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தால், உங்களது தலையானது எடை கூடி மிகவும் பாரமாக இருக்குமே", என்று ஒரே போடாகா போட்டார்.

Thursday, October 14, 2010

உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது என்ன என்ற கேள்வி நம்மில் பெரும்பாலருள் எழுகிறது.

உலகத்தவர் பார்வையில் பெரும் தனம் தேடியவன் வெற்றி பெற்றவன். புகழ் அடைந்தவன் வெற்றி பெற்றவன். அதிகாரங்களை அடையப் பெற்றவன் வெற்றி பெற்றவன்.
ஆனால் ஞானிகள் இந்த கருத்தின் அடிப்படையையே தவறு என்று கருதுகின்றனர் போலும்.
கபீர்தாஸ் சொல்வதைப் பாருங்கள்.
நன்று அடியார்க்கு தோல்வியே, புவியோர்க்கு சேரட்டும் வெற்றியே
வென்றவர் போவார் எமபுரமே, தோற்றவர் அடைவார் அரியிணையே
அரியிணை =ஹரியின் இணையடி; எமபுரம் = பிறவிச் சுழல்]கபீர்தாஸரின் கருத்தை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த புனித இக்னேஷியஸ் லயோலா என்ற கிருத்துவ போதகரும் வலியுறுத்தினார். அவர் கிருத்துவ மதத்தில் ஜெசுயிட்(Jesuit) வழிமுறையை பாரீஸ் பல்கலைக் கழகத்தில் துவக்கியவர். ஸ்பெயின் தேசத்து போரில் தன் கால்களை இழந்து பின்னர் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியவர். மண் ராஜ்யத்தை விட்டு விண் ராஜ்ஜியத்திற்கான தன் போராட்டத்தை ஆரம்பித்தவர்.
அவரை விட இளையவரான கல்லூரி ஆசிரியர் பிரான்ஸிஸ் சேவியரிடம்(1506- 1551) அடிக்கடி சொல்வதுண்டாம்.
“Master Francis! What shall it profit a man if he gains the whole world and loses his own soul?"
[பிரான்ஸிஸ் பெருந்தகையே! ஆன்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன ?]

அறிவு கூர்மை மிகுந்தவர் பிரான்ஸிஸ். அவருடைய பேருரைகளை கேட்க பல்கலை கழகத்தில் மக்கள் திரளாகக் கூடினர். அவர் ஒரு பன்மொழி வித்தகர். வாலிப வயதினரான அவருக்கு மிக நல்ல எதிர்காலம் காத்திருந்தது. நல்ல குடும்பம், செல்வம், புகழ் என்பன போன்ற வெற்றி அவருடைய காலடியிலே கிடந்தது என்றும் சொல்லலாம்.
ஆனால் இக்னேஷியஸ் லயோலாவின் கேள்வி பிரான்ஸிஸ் சேவியரின் மனதில் ஆன்மீகக் கனலை கொழுந்து விட செய்தது.
லயோலாவுடனான சத்சங்கம் அவரை இறைவனின் சேவைக்கென தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டியது. தம் பதவியை துறந்தார். இக்னேஷியஸ் லயோலாவை தமது குருவாகக் கொண்டு பிரார்த்தனையிலும் தியானத்திலும் நேரத்தை செலவிட்டார். தனது செல்வத்தையெல்லாம் ஏழை எளியவர்க்கு வழங்கி விட்டு கால்நடையாக ஜெருசலேமுக்கு தலயாத்திரை மேற்கொண்டார். ஏசுவின் புகழை சென்ற இடமெல்லாம் பரப்பினார். எவரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. தனக்கு பிறர் கொடுக்க முன் வந்த வெகுமதிகளை வாங்க மறுத்தார். அவருடைய தன்னலமற்ற இந்த பண்பு மக்களை அவர் பக்கம் ஈர்த்தது.

முதன் முதலாக இறைப்பணிக்கென 1542 -ல் கடற்பயணம் மேற்கொண்டார். கப்பலில் சீமான்களோடு அமர்ந்து உணவு அருந்த வேண்டியவர் சாமானியர்களோடு அமர்ந்து உணவு உண்டார். நோயுற்றவர் அருகிலிருந்து சிகிச்சை அளித்தார். தமது முப்பத்தி ஆறாம் வயதில் மேற்கு கடற்கரையில் கோவாவில் வந்திறங்கினார். நீண்ட பயணத்தினால் உடல்நலம் மிகவும் குன்றியிருந்தது. ஆனால் உற்சாகம் குறைந்திருக்கவில்லை.
பொது இடங்களில் எல்லாம் அவருக்கு வரவேற்பு என்பது கிடையாது. அன்னியராகக் காணப்படும் ஒருவரிடம் எவரும் நெருங்கிப் பழகத் தயங்குவர். கூடவே புதுப் புது மொழிகள் அதனால் வரும் பிரச்சனைகள். இந்தியா தவிர இலங்கை, சீனா ஜப்பான் என பல நாடுகளிலும் இறைத் தூதர் ஏசுவின் புகழ் பாடி இருபது ஆண்டுகள் பல இன்னல்களுக்கிடையே சேவை புரிந்தார்.
இப்போது சொல்லுங்கள்! அவரது வாழ்க்கை வழிமுறை வெற்றிக்கானதா தோல்விக்கானதா?
சாமானியர்கள் பார்வையில் பிழைக்கத் தெரியாதவர், ஆனால் கபீரின் பார்வையில் அவரே வென்றவர். விண்ணுலகை சொந்தமாக்கிக் கொண்டவர். தன்னலம் பாராது பிறர் மேன்மைக்காக உழைக்கும் எவருக்கும் இறைவன் தன் கதவுகளை திறந்து வைத்துக் காத்திருக்கிறான்.

இறைவன் அருள் வேண்டுமானால் முதலில் பணிவு மனப்பான்மை வேண்டும். தமக்கு வருவதை எல்லாம் அவனருளாகக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். அப்படி ஒரு நிலைக்காக எப்படி நம்மை இறைவன் வழிப்படுத்துகிறான் என்பதை இந்த ஆங்கிலக் கவிதை அழகாக சொல்கிறதுI asked God for strength, that I might achieve
I was made weak, that I might learn humbly to obey..
I asked for health, that I might do great things
I was given infirmity, that I might do better things..

I asked for riches, that I might be happy
I was given poverty, that I might be wise..
I asked for power, that I might have the praise of others
I was given weakness, that I might feel the need of God
I asked for all things, that I might enjoy life
I was given life, that I might enjoy all things


இந்த உண்மையை அறியாது உலகை வெற்றி கொள்ள முயலுவோர் போக்கை பகவத்கீதை வெண்பா சிறப்பாக சித்தரிக்கிறது.
நினைத்ததை அடைந்தேன் இன்று, நில்லேன், வேறொன்றை
நினைத்து அதை அடைவேன், இன்னும் நிசம் காண்- எனக்கோ
அதுவுண்டு இதுவுண்டு, எது பெரிது எங்குண்டோ
அதுவும் எனக்கே உடைமையாம் (16:13 )
எண்ணம் பல மனதில், என்றும் ஒரே குழப்பம்
மண்ணில் மயக்க வலைப்பட்டே- கண் தெரியார்
ஆழ்வர், இவர் காம அனுபவத்திற் சிக்குண்பார்
பாழ் நரகமே சம்பளம்
. (16: 16)

[பகவத்கீதை வெண்பா, மூன்றாம் பாகம்: ஏ பெரியத்தம்பிப்பிள்ளை (1976) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம், இணைய வழி தரவிறக்கம்]
பலப்பல வெற்றிகளுக்காக மதி மயங்கி, வாழ்க்கையை கழித்தோர் கடைசியில் சம்பாதித்தது ‘பாழ் நரகமே” என்பது, கபீர் வென்றார் போவார் எமபுரமேஎன்று சொல்வதை உறுதி செய்ததாகிறது.
இந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள இக்னேஷியஸ் லயோலா அவர்களின் தினசரி பிரார்த்தனையை மனதில் வைத்தால் முத்திக்கு வழி தேடலாம்.
Dearest Lord,
Teach me to be generous.
Teach me to serve you as you deserve;
To give and not to count the cost;
To fight, and not to heed the wounds;
To labor, and not to seek to rest;
To give of myself and not to ask for reward,
Except the reward of knowing that I am doing
YOUR WILL.

அறிமுகம்

அன்பு கொண்ட அனைத்து உலக ஆன்மாக்களுக்கும் என் வணக்கம்!
உலகில் பல ஆன்மாக்கள் தோன்றி மறைகின்றன. பல ஆன்மாக்கள் கல்வி, செல்வம், புகழ், அரசியல், விஞ்ஞானம், தொழில் என்று பல வகையான விஷயங்களில் முன்னேறி தன் அனுபவங்களை இவ்வுலகிற்கு தந்துவிட்டுச் செல்கிறது. இதில் மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த வாழ்க்கையான ஆன்ம (ஞான) வாழ்க்கை தான் மிகப்பெரிதும் மதிக்கப் படுகின்ற வாழ்க்கையாகும். ஆகவே இந்த வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை இவ்வுலகிற்கு பல ஞானிகள் வெளிப்படுத்திச் சென்று இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதனுடைய வாழ்க்கையையும், அறிவையும் மேம்படச் செய்வதற்காகத் தான், இந்த வகையில் நான் சொல்லப் போகும் விஷயங்கள் என்னுடைய ஆன்ம அனுபவத்தால் அறிந்த விஷயங்கள். ஆகவே நான் சொல்லப்போகும் இவ்விஷயங்கள் உலகத்தின் எந்த ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ எதிரான விஷயம் அல்ல. இது முற்றிலும் ஆன்மாவின் அனுபவமும், ஆன்ம ரகசியமும் ஆகும். எல்லோரும் இதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மேலும் இதைபற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும். இதுவே ஒவ்வொரு ஆன்மாவின் கடமையாகும். நானும் இந்த ஆன்ம இரகசியத்தை ஆராய்ச்சி செய்து அதன் உண்மையை கண்டறிந்து இவ்வுலகிற்கு சொல்ல விரும்புகிறேன்.

உலகத்தில் உயிரினங்கள் தோன்றி பல்வேறு பரிணாமங்களை அடைந்து அது மனிதன் வரை உருபெறுகிறது. அதனால் ஒரு ஆன்மாவுக்கு பல்வேறு அனுபவங்கள் ஏற்படுகிறது. அதவாது பசி, தன்னை காப்பாற்றிக்கொள்ளுதல், உணவை வேட்டை ஆடுவது, மழை-வெய்யில் இவற்றிலிருந்து தப்பிக்க இருப்பிடம் அமைத்துக் கொள்வது, மேலும் உயிர் உற்பத்தி, வாழ்க்கை முறை, இன்பம்-துன்பம், சமூகம், கல்வி, ஆன்மீகம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனுபவங்களை ஒரு ஆன்மா ஒரு அணு முதல் மனிதன் வரை அதாவது தான் வாழ்ந்து கொண்டு இருக்கும்வரை பல்வேறு அனுபவங்களை பெறுகிறது. மேலும் இந்த அனுபவங்களைக் கொண்டு மனிதன் தன் வாழ்க்கையை நடத்துகிறான்

இப்படியாக ஒரு ஆன்மா பல ஜீவராசிகளில் பயணம் செய்து மனிதனாக உருவாகும் போது அது பிரம்மத்தை முழுமையாக அறிய ஆரம்பிக்கிறது. அப்படி ஆரம்பிக்கும் போது, அந்த பிரமத்தின் தேடலில் பல அனுபவங்கள் ஏற்படுகிறது. அதை அந்த ஆன்மா யோகத்திற்க்கு பயன் படுத்துகிறது. அந்த பிரம்ம அனுபவத்தில் முழுமை அடையவில்லை என்றால் அந்த ஆன்மா மீண்டும் மனிதனாக பிறவி எடுத்து தன் பயணத்தை தொடர்கிறது. இப்படி பல பிறவிகள் அதாவது அதன் வாழ்க்கை, குடும்ப சூழ்நிலை, தொழில், கல்வி போன்ற பலவகையான அனுபவங்களின் அடிப்படையில் அது ஆன்மீகத்தின் முழுமைநிலையான முக்தி நோக்கி பயணிக்கிறது. அப்படி பயணிக்கும் போது ஏற்படும் ஆன்மீக அனுபவங்களை இந்த உலகிற்கு வாய்வழியாகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவித்து செல்கிறது. அந்த ஆன்மா தான் கடந்து வந்த பாதை, மேலும் தான் கடக்க வேண்டிய நிலை இரண்டையும் சேர்த்து தனது அனுபவமாக அந்த ஆன்மா விட்டுச் செல்கிறது. அந்த அனுபவங்களை பல ஆன்மாக்கள் பின்பற்றுகிறது.
அந்த அனுபவங்களை பின்பற்றும் ஆன்மாக்கள் அது தான் கற்றுக் கொண்ட அனுபவங்களையும், தனக்குள் இருக்கும் பதிவுகளையும் கொண்டு புதிய ஆன்மீக பாதையை வகுக்கிறது. இப்படி ஆன்மீக பாதையை கடைப்பிடிக்கும் ஆன்மாக்கள் தன் தகுதிக்கும், அனுபவத்திற்க்கும் ஏற்ப அதனுடைய நிலைகள் நின்றுவிடுகிறது. அதிலே, சில ஆன்மாக்கள் முக்தி வரை தன்னுடைய அனுபவங்களை இந்த உலகிற்கு வெளிப்படுத்துகிறது. ஆனாலும் சில முக்தியடைந்த ஆன்மாக்கள், அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் தகுதிக்கு ஏற்ப அவர்களுடைய வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப, அவர்களின் பண்பாடு, கலாசாரம், குணம் இவைகளுக்கேற்ப யோகத்தை முழுமையாக கூறாமல் சில வழிமுறைகளை மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

இதற்கு உதாரணம் என்னவென்றால் ஒரு மலையின் சிகரத்திற்கு பயணம் செய்யும் போது வழியில் பல இயற்கை காட்சிகளை ரசித்து செல்கிறோம். ஆனால பயணத்தின் முடிவு சிகரத்தின் உச்சியை அடைவது தான். மலையில் ஏறும்பொது சிலர் சிகரத்தின் உச்சியை அடைய முடியவில்லை என்றால், அவர்கள் தான் அடைந்த இடத்திலிருந்து கீழே பார்த்து நாம் இவ்வளவு தூரம் வரை வந்திருக்கிறோம், இதுபோதும் என்று நினைப்பார்கள். மேலும் அங்கிருந்தபடியே அங்கிருக்கும் நிலைகளை ரசிக்க தொடங்கி அங்கேயே நின்று விடுவார்கள். இப்படித்தான் பல ஆன்மாக்கள் தனது முழுமை நிலையிலிருந்து கீழ்நிலை வரைக்கும் தனது ஆன்மீக அனுபவங்களை தான் அடைந்தவரை தெரிவித்துவிட்டு போயிருக்கிறார்கள்.

அநேக ஆசிகளுடன்,