Monday, September 19, 2011

தீமைக்கெல்லாம் காரணம் பணம்



தீமைக்கெல்லாம் காரணம் பணம்* செல்வத்தின் பாலுள்ள விருப்பை விடு. ஒன்றொன்றுக்குள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தறி. மனம் உணர்ச்சி வசப்படாமலிருக்க பயில, உன் சொந்த முயற்சியால் ஈட்டும் சிறு பொருளுடன் திருப்தி அடை.
* தீமைக்கெல்லாம் ஆதி காரணம் செல்வமே. உண்மையில் அதில் இன்பத்தின் அடிச்சுவடை சிறிதளவும் காண முடியாது. செல்வருக்குத் தம் மக்களிடமிருந்தே அச்சம் தோன்றும். எங்கும் இதே நிலைதான்.
* உன் மனைவி யார்? உன் மகன் யார்? இவ்வுலகம் மிக விசித்திரமானது நீ யார்? யாருடையவன் நீ? நீ எங்கிருந்து வந்தாய்? இவ்விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்.
* உன் சுற்றத்தாரையோ, செல்வத்தையோ, இளமையையோ பற்றிப் பெருமைப்படாதே. எல்லாவற்றையும் விழுங்கும் காலன், இவற்றையும் ஒரு கணத்தில் விழுங்கிவிடுவான். பொய்யான இப்பொருள்கள் யாவற்றையும் துறந்து, பரமனைக் கண்டு அவனிடம் சரணடைந்து விடு.
* உணர்ச்சிவெறி, கோபம், பற்று, பேராசை இவற்றையெல்லாம் துறந்து, உன் உண்மையான தன்மையைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்.
* ஆத்ம ஞானம் இல்லாத மூடர் பயங்கர நரகங்களையே அடைவர். இவர்கள் கோயிலிலோ, மரத்தடியிலோ வசிக்கலாம். தரையில் படுத்துறங்கலாம். மான்தோல் போர்த்துக் கொள்ளலாம். விஷய போகங்களை துறக்கலாம். இத்துறவுகளால் யாருக்கு இன்பம் ஏற்படப் போகிறது?
* நண்பனிடமோ, பகைவனிடமோ, மகனிடமோ, உறவினிடமோ, யுத்தத்தின் பாலோ, சமாதானத்தின்பாலோ பற்று வைக்காதே. நீ விரைவில் பரம நிலை அடைய விரும்பினால், எதிலும் சமபுத்தியுடையவனாக இரு. உண்மையைப் பொய்யினின்று வேறுபடுத்தி அறி.

No comments:

Post a Comment