Friday, January 30, 2015

ஓஷோவின் விளக்கம்


கேள்வி – பதில்
தியானம் என்றால் என்ன - பகுதி – 1
தியானம் என்ற இந்த வார்த்தை தவறாகவும் குழப்பமானதாகவும் இருக்கலாம், ஏனெனில் தியானம் என்பதற்கு ஆங்கிலத்தில் மூன்று வார்த்தைகள் உள்ளன. கான்சென்ட்ரேஷன் – கான்டெம்லேஷன் – மெடிடேஷன் – அதாவது ஒருமுகப்படுத்துதல், சிந்தனை, தியானம். ஆனால் இந்த மூன்று வார்த்தைகளுமே சமஸ்கிருத வார்த்தையான தியானா என்ற வார்த்தையை மொழிபெயர்க்க போதுமானதாக இல்லை. புத்தர் உபயோகித்த பாலி மொழியில் முதலில் அது ஜானா என்று கூறப்பட்டது. ஜானா என்ற பாலி மொழி வார்த்தைதான் சமஸ்கிருத மொழியில் தியானா என்று உச்சரிக்கப்பட்டது. போதிதர்மர் புத்தரின் கொள்கைகளை சீனாவுக்கு எடுத்துச் சென்றபோது அது ஜானாவிலிருந்து சானா என்று மாறியது. ரின்ஜாய் சீனாவிலிருந்து அந்த கொள்கையை ஜப்பானுக்கு எடுத்துச் சென்ற போது சானா என்பதிலிருந்து அது ஜென் என்று உருமாறியது. அது புத்தரின் ஜான் அல்லது ஜானா என்பதற்கு அருகில் வருகிறது.
ஆனால் அதற்கிணையான வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை. ஏனெனில் மெடிடேஷன் என்ற ஆங்கில வார்த்தை எதன் மீதாவது கவனம் வைப்பது என்ற அர்த்தத்தை கொடுக்கிறது. எதன் மீதாவது கவனத்தை குவிப்பது, எதைப் பற்றியாவது சிந்தனை செய்வது, எதைக் குறித்தாவது தியானம் செய்வது என்பது போல – ஆனால் தியான் அல்லது ஜென் என்றால் எந்த பொருளும் இல்லை.
ஜென் என்றால் ஒருமுகப்படுத்துவதோ, சிந்தனை செய்வதோ, எதன் மீதாவது தியானம் செய்வதோ அல்ல. ஏனெனில் அதற்கு எந்த பொருளும் இல்லை. நீ இருக்கிறாய், அவ்வளவுதான். மௌனமாக, மனமின்றி, எந்த எண்ணங்களுமின்றி இருக்கிறாய்.
இதனால்தான் சிகிடோ தியானத்தைப் பற்றி கூறும்போது ஒருவர் ஞானமடைய தியானமோ அல்லது எந்த வித இடைவிடாத முயற்சியுமோ தேவையில்லை. என்று கூறுகிறார்.
ஆனால் உங்களுடைய புரிதலுக்காகவும் தெளிவுக்காகவும் நான் தியானத்தைப் பற்றி பேசும்போது மெடிடேஷன் என்ற இந்த வார்த்தையைத்தான் உபயோகிக்க வேண்டி வருகிறது. இது ஒரு பொருளற்ற வார்த்தை, இதற்கு தியானம் அல்லது ஜென் ஆகியவற்றின் குணம் கிடையாது. ஆனால் ஆங்கிலத்தில் வேறு வார்த்தை இல்லாததால் நான் இதை உபயோகிக்கிறேன்.
வேறு எந்த வார்த்தையும் இல்லை என்பதற்கு ஒரு காரணம் உண்டு. மேற்கத்திய நாடுகளில் தியானம் என்ற நிலை வரை வரவேயில்லை. ஒருவர் வெளியுகத்திலும் உள்உலகத்திலும் எதுவும் செய்யாமல் வெறுமனே தானாயிருக்கும் நிலை வரை வளரவேயில்லை. ஒருவர் வெறுமனே ஒரு ஆழ்ந்த அமைதியில் இருப்பில் இருத்தல். அது உன்னை உன் மையத்தினுள் கொண்டு வரும், நீ உள் மையத்தில் இருக்கும் கணம் நீயும் ஒரு புத்தனாக ஞானமடைந்த ஒருவராக வளர்கிறாய். உன்னுடைய விழிப்புணர்வு முதல் முறையாக, எப்படி இரவு முடிந்து சூரியன் உதயமாகி காலை வந்தவுடன் ஒரு தாமரை தனது இதழ்களை விரிக்கிறதோ அப்படி தனது இதழ்களை விரிக்கிறது.
சிகிடோ கூறியது மிகவும் சரிதான் எந்த வித முக்கியமான ஒழுங்குமுறையும் தேவையில்லை. எந்த வித குறிப்பிட்ட விதிமுறையும் தேவையில்லை. எந்த வித மனம் குறித்த முயற்சியும் தேவையில்லை. அதைத்தான் அவர் தியானம் என்று குறிப்பிடுகிறார். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்தல் மட்டுமே தேவை. மனம், உடல், இதயம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து விடு. இதுதான் சாலையின் எல்லை என்ற இடம் வரை எல்லாவற்றையும் கடந்து சென்று கொண்டே இரு. அந்த எல்லையில் நீ மட்டுமே இருப்பாய்.
பாஷோ கூறுகிறார் :
அமைதியாக அமர்ந்திரு
எதையும் செய்யாதே
வசந்த காலம் வரும்
புல் தானாகவே வளரும்.
நீ எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை, வெறுமனே அமர்ந்திரு, எதையும் செய்யாதே. ஏனெனில் நீ செய்யும் எதுவும் உன்னை உன்னிடமிருந்து எடுத்து சென்று விடும். நீ எதையும் செய்யாத போது முழு சக்தியும் உள்ளே சேருகிறது, அது வேறு எங்கும் செலவிடப்படுவதில்லை. நீ உனது மனதை கடக்கும் போது உனது எண்ணத்தில் செலவிடப்பட்டுள்ள சக்தி விடுவிக்கப்படுகிறது. நீ உனது இதயத்தை கடக்கும்போது உனது உணர்ச்சிகளில், உணர்வுகளில், பந்தபாசங்களில், பிடிப்புகளில் சிக்கியுள்ள சக்தி விடுவிக்கப்படுகிறது.
நீ இப்போது அளவற்ற சக்தியால் நிரம்பி இருக்கிறாய். இந்த அளவற்ற சக்தி உனக்கு பிரபஞ்சத்தின் முதல் சுவையை தரும். இந்த அளவற்ற சக்தி மிகபிரம்மாண்டமான தூண் போல விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நிற்கும் போது நீ அண்டத்துடன் உள்ள தொடர்பை காண்கிறாய். நீ இனிமேலும் தனியானவன் அல்ல. உண்மையில் நீ என்பது இல்லை. பிரபஞ்சம் மட்டுமே இருக்கிறது. பின் இந்த பிரபஞ்சம், இந்த அண்டம், இந்த வாழ்வு எல்லாமே ஒரு நடனம்தான்.
நான் உங்களுக்கு நடனமாட சொல்லிக் கொடுக்கிறேன்.
நான் உங்களுக்கு நேசமானவர்களாக இருக்க சொல்லிக் கொடுக்கிறேன்.
நான் முழுக்க முழுக்க வாழ்வுக்கு ஆதரவானவன், உங்களது அனைத்து மதங்களும் வாழ்க்கைக்கு எதிரானவை.
நான் இந்த நிகழ்கால கணத்திற்கு முழுக்க முழுக்க ஆதரவானவன். இறந்த காலத்தில் நுழைய வேண்டியதில்லை, ஏனெனில் அது நினைவு மட்டுமே. உனது நினைவு எந்த விதத்திலும் பிரபஞ்சத்துடன் தொடர்புடையதல்ல. எதிர்காலத்தில் நுழைய வேண்டியதில்லை, ஏனெனில் அது கற்பனை மட்டுமே.
இங்கே மட்டுமே இரு, நீ ஆச்சரியப்படுவாய். நீ இப்போது இங்கே மட்டுமே இருந்தால் எல்லா எண்ணங்களும் மறைந்து விடும். ஏனெனில் எல்லா எண்ணங்களும் இறந்த காலத்தை சேர்ந்ததாகவோ எதிர் காலத்தை சேர்ந்ததாகவோ தான் இருக்கும். எந்த எண்ணமும் நிகழ்காலத்தை சேர்ந்ததில்லை.
நிகழ்காலம் மிகவும் தூய்மையானது, சுத்தமானது, தெளிவானது, அது அண்டத்துடன் இணைய ஒரு இணைப்பு. இதுதான் ஜென். இதுதான் நிலையான வாழ்வினுள் நுழைய இருக்கும் சாவி. நிலையான வாழ்வின் உணர்வே எல்லா பதட்டங்களையும், முதுமை இறப்பு பிறப்பு நோய் ஆகியவற்றின் வேதனைகளையும் உன்னிடமிருந்து எடுத்துவிடும்.
நீ பிறக்கவேயில்லை, மேலும் நீ இறப்பதேயில்லை.
இந்த உடல் மட்டும் தான் மாறிக் கொண்டேயிருக்கிறது
நீ வீடுகளை மட்டும்தான் மாற்றிக் கொண்டேயிருக்கிறாய்
ஆனால் நீ உண்மை, நிஜமானவன்.
சத்தியம் வெளியே எங்கோ இல்லை, அது ஆழ் மையத்தில் உள்ளே இருக்கிறது.
அதனால் ஜென் என்பது எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பது. அந்த ஆழ்ந்த மௌனத்தின் இருப்பில் நீ தளர்வு கொள்ள கொள்ள வசந்த காலம் வரும், புல் தானாகவே வளரும். நீ திடீரென மலர்வாய் – உனது கண்களில் ஒரு ஆழம் வரும். உனது தோற்றத்தில் ஒரு புதிய பொலிவு வரும், உனது ஒவ்வொரு செயலும் சந்தோஷமானதாக மாறும். அது மரம் வெட்டுவதாக இருந்தாலும் சரி, கிணற்றிலிருந்து நீர் இறைப்பதாக இருந்தாலும் சரி அது என்னவாக இருந்தாலும் சரிதான்.
I celebrate myself : God is no where life is nowhere che # 1

Friday, January 16, 2015

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள் ...

1கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
2. கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும்     கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சனசக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் .
3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து      நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்,ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.
4.இக் கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
5.இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை . 
6.இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும் ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை மீந்து போய் வீணானதும் இல்லை.
7.இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.
8.சிங்கத்துவாராவின் முதல்படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும் . இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.

Saturday, January 10, 2015

நெற்றிக்கண் - தெரிந்துகொள்வோம்


நெற்றிக் கண் என்று ஒன்று உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை.சிவனை முக்கண்ணன் என்று அழைத்து வணங்குவார்கள். நக்கீரரை சோதிப்பதற்காக வந்த சிவன் தனது நெற்றிக்கண்ணை திறந்தார் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
கடவுள் என்று ஒருவரே இல்லை என்றும், இந்து மதத்தில் கூறப்படுவது ஜஸ்ட் புராணக்கதை என்றும் கூறும் அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் வாழும் நாம் நெற்றிக்கண் என்று ஒன்று உண்டு என்று கூறினால் அதற்கும் ஏதாவது வாதம் வைப்பார்கள்.
பகுத்தறிவு என்றால் என்ன என்றே விளங்கிக் கொள்ளாமல், இறை நம்பிக்கையற்ற தாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்றும் இறை நம்பிக்கையுள்ளவர்கள் (எம் மதமானாலும்) பகுத்தறிவு அற்றவர்கள் என்றும் கூறி மிகவும் வெப்பமான காலத்திலும் கருப்புச்சட்டையை அணிவது எந்த பகுத்தறிவில் சேர்ந்தது என்று தெரியவில்லை.
ஆனால் இந்துமதம் பகுத்தறிவுள்ள விஞ்ஞானத்துடன் இணைத்த மதம்.அதன் சிறப்பை மெல்ல மெல்ல இப்போது தான் சில மேற்கத்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து நமது அறிவு ஜீவிகளுக்கு புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோவில்கள் கட்டி வைத்ததற்கும், பரம்பொருள் ஒன்றே என்று கூறும் இந்துமதம் கடவுளை பல நாமங்களில் அவரவர் விருப்பப்படி வழிபட அனுமதிப்பதற்கும் மற்றும் அதன் சில கொள்கைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் பின்னால் பலமான காரணங்கள் உள்ளன.இதை விளங்கிக்கொள்ளும் அறிவு குறைவாக உள்ள காரணத்தால் அதை பொய் என்றோ மூட நம்பிக்கை என்றோ கூறக்கூடாது.
அதன் சில வழக்கங்களை சுயநலத்திற்காக சிலர் துஷ்பிரயோகம் செய்தால் அதற்கு மதம் பொறுப்பல்ல. எம்மதமானாலும் அன்பையும் கடவுளை அடையும் வழியயும்தான் கூறும்.ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு மதங்களை பழிப்பது சரியல்ல.
இப்போது மூன்றாவது கண்ணை பற்றி பார்ப்போம்.
“த்ரியம்பகன்” என்பது சிவனின் திருநாமங்களில் ஒன்று. இது மூன்றாவது கண்ணைக் குறிக்கும். மற்ற இரண்டு கண்களும் புறக்கண்கள். பார்வையில் படும் குப்பைகளையெல்லாம் அவை மூளைக்கு புகட்டிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக யாரையாவது பார்த்தால், பழைய அபிப்பிராயங்கள் உங்களுக்குள் புறப்படுகின்றன. இந்த இரண்டு கண்களும் உண்மையை பார்ப்பதில்லை. எனவே அறிதலுக்கென்றே சிவனின் மூன்றாவது கண் திறக்கிறது. அதுவே ஞானக்கண். இந்திய மரபில் அறிதல் என்பது படிப்பால் பெறுவதல்ல. புத்தகங்கள் தருவதல்ல. ஆழ்ந்த புரிதலையே அறிதல் என்கிறோம். இந்த மூன்றாவது கண் திறக்கிற போதுதான் சிவனை உணர்கிறீர்கள்.
படித்த மனிதர்கள் எல்லோருக்குமே ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த கதை தெரியும். ஆப்பிள் பழம் கீழே விழுந்தது பற்றியே அனைவரும் பேசுகிறார்கள். ஆனால், செடியாக இருந்த அந்த ஆப்பிள் மரத்தை ஒரு சக்தி மேல் நோக்கி வளர்த்திருக்கிறதே அது குறித்து யாரும் பேசுவதில்லை.
ஆனால் இப்போது ஆய்வுகளின் மூலம் மனிதனுக்கு ஒரு மூன்றாவது கண் இருப்பதாகவும் அதன் மூலம் பல அற்புதங்கள் நிகழ்த்தமுடியும் என்றும் தெரியவருகிறது. இந்த மூன்றாவது கண் பெயர் பினியல் சுரப்பி. (Pineal Gland).
பிரெஞ்சு அறிவியல் நிபுணரான Rene Descartes (René Descartes was a French philosopher, mathematician and writer who spent most of his life in the Dutch Republic (1596-1650) இதனை ஆன்மாவின் இருக்கை என குறிப்பிடுகிறார். இது இந்துக்களின் ஆக்ஞா சக்கரத்துடன் ( நெற்றி சக்கரம்) தொடர்புடையது.
சிவபெருமானின் நெற்றிக்கண் எந்த வடிவில் எப்படி காணப்படுகிறதோ அதே மாதிரி இதுவும் அமைந்துள்ளது.
இந்த பினியல் சுரப்பி ஒளியின் மூலம் தூண்டப்படுகிறது.இது மெலெண்டொனின் எனும் திரவத்தை சுரக்கிறது. இத்திரவம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மன அழுத்தத்தை குறைக்கிறது.
நமது மதம் இந்த சுரப்பியை தூண்டுவதன்மூலம் ஞானம்/ பேரின்பம் அடையலாம் என கூறுகிறது. இந்த மூன்றாவது கண்ணை தூண்டுவதன்மூலம் முக்காலங்களை அர்யும் தன்மை,விழிப்புணர்வு, பல நல்ல சக்திகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
குண்டலினி தியானம் மூலம் இந்த மூன்றாவது கண்ணை தூண்டலாம். நம் குருமார்கள் தீட்சயளிக்கும் பொருட்டு புருவ மத்தியில் ஆசீர்வாதம் செய்வது எத்தன பொருட்டு என்பது இப்போதாவது புரிகிறதா?
தகுந்த பயிற்சியுடனும் நம்பிக்கையுடனும் இந்த ஆக்ஞா சக்கரத்தை இயங்கச்செய்து அளவில்லா ஆனந்தத்தையும் சக்தியையும் பெறலாம்.ஒருவர் தகுந்த பயிற்சி பெற்றால் நினைவுகளைக் குவித்து நெற்றிப்பொட்டின் ஊடாக வெளியேற்றி தீயை கூட வரவைக்கலாம் . (சிவன் திரிபுரங்களை எரித்த கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்).
மனதிலுள்ள தீய எண்ணங்களை எரித்து நல்ல எண்ணங்களை வளர்க்கலாம்( சிவன் காமனை எரிந்தத கதையும் ஏன் முருகப்பெருமான் தோன்றிய கதையும் அனைவரும் அறிந்ததே )
இதை தகுந்தபயிற்சியிடன் எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருந்தால் நாம் திறமைசாலிகளாக வாழலாம். அப்படி நாம் வாழக் கூடாது என்று நினைக்கும் சிலர்தான் இதயெல்லாம் போலி என்று கதைபரப்பினார்களோ தெரியவில்லை.
நம் முன்னோர்களின் நல்ல சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் நமது அறிவீனத்தால் போலி என்று கேலி செய்து இழந்து விட்டோம். இனியாவது விழிப்போம்.
''இந்துமதம் அர்த்தமுள்ளது. பொருள் பொதிந்தது''

Thursday, January 1, 2015

ஓஷோ அமைதி பற்றி

 
தியானம் செய்யும்போது சில நேரங்களில் அமைதிநிலை நீரோடை போல வந்து சேரும். கவனித்துக் கொண்டிரு. அமைதி நிலை நிகழ்கிறது, நான் சாட்சி மட்டுமே என்பது போல தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிரு. சில நேரங்களில் ஆனந்தம் நீருற்று போல பொங்கி வரும், ஒவ்வொரு நாடி நரம்பிலும் பரவும், அதையும் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிரு. எதையும் பிடித்து தொங்காதே.
உனது வெறுமை ஆனந்த தன்மை, அமைதி நிலை, பிரகாசம் ஆகியவற்றின் அலைகளை அனுமதிக்கும்.
உன்னுடன் நீ அமைதியாக இருத்தலே அமைதி நிலை.
உனக்குத் தேவை உயிர்த்துடிப்புள்ள அமைதிநிலை மற்றும் சுறுசுறுப்புடன் கூடிய மௌனம்.
உள்ளார்ந்த மௌனமும் உள்ளார்ந்த அமைதியும்தான் முழுமையான தளர்வு நிலையின் கனிந்த நிலை.
உள்ளார்ந்த அமைதி தியானத்தின் பக்க விளைவே.
உள்ளார்ந்த அமைதியின் நிழல் போல அன்பு தொடர்ந்து வரும்.
வானம்
உனது உள்இருப்பு என்பது உனது உள்வானமே. சூரியன், சந்திரன், நட்சத்திரம், பூமி, கோளங்கள், இந்த முழு பிரபஞ்சம் என யாவற்றையும் உள்ளடக்கிய வானம் அது. எல்லாவற்றிற்க்கும் இடம் தரும் வானம் அது. இருக்கும் அனைத்திற்க்கும் பின்புலமாக விளங்கும் நீலவானம் அது. எல்லாமும் வரும் போகும். ஆனால் வானம் அதேபோலவே இருக்கும்.
மனமற்ற தன்மை என்பது வெறும் விழிப்புணர்வு மட்டுமே. அது வெறும் வானம் போன்றது.
வானமாக மட்டுமே இருக்க உனக்கு தைரியம் வேண்டும்.
உன்னுள் நீ தளர்வு பெற்றால் உனது உள் வானத்தை நீ காண்பாய்.
வானத்தை மட்டும் பார், மேகத்தை மறந்து விடு. இது நிலைமாறுதலை கொண்டு வரும்.
உன்னுடைய அனுபவங்கள், உன்னுடைய இருப்பாகிய வானத்தில் வரும் மேகங்கள் போன்றதே.
நீல வானத்தில் செல்லும் மேகங்கள் எந்த தடயத்தையும் விட்டுச் செல்வதில்லை.
சப்தமும் நிசப்தமும்
வாழ்வை விளையாட்டாக எடுத்துக் கொள், அப்போதுதான் இரண்டு உலகங்களும் ஒருசேர உனக்கு கிடைக்கும், இந்த வெளி மற்றும் உள் உலகம், சப்தமும் நிசப்தமும், அன்பும் தியானமும், தொடர்பும் ஒருமையும் என இந்த விஷயங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சேர்ந்தாற்போல வாழப்பட வேண்டும், அப்போதுதான் உனது இருப்பின் அடி ஆழமும், உயர்ந்த உச்சியும் உனக்குத் தெரியவரும்.
இசை என்பது சப்தம் மட்டுமல்ல, அது மௌனத்தையும் உள்ளடக்கியது.
மிக ஆழ்ந்த மௌனத்தில் உண்டாக்கும் சில சிறிய சப்தங்களே நாம்.
சப்தமும் நிசப்தமும் ஒன்றிணைந்தே செல்லும், எதிர்மறை இல்லாவிடில் இதுவும் இருக்க முடியாது.
சப்தம் நமது மனம், மௌனம் நமது இருப்பு.
சப்தம் இந்த பூமியை சேர்ந்தது, மௌனம் கடந்ததை சேர்ந்தது.
வாழ்க்கை சப்தமும் நிசப்தமும் இணைந்த லயமாக இருக்க வேண்டும்

சேஷாத்ரி சுவாமிகள் - சிறை செய்தால் அறை விழும்!

இது போன்ற சித்து விளையாடல் ஒன்றை சற்று வேறுவிதமாக சுவாமிகள் 1928ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவின் போது நிகழ்த்தினார். ஈ மொய்த்த தின்பண்டங்களை விற்றுக் கொண்டிருந்த கடைக்காரனிடம் சுவாமிகள் ‘இதை விற்காதே’ என்று எச்சரித்தார். அவருடைய எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினான் கடைக்காரன். இரண்டு முறை எச்சரித்த சுவாமிகள் மூன்றாவது முறை கடையில் இருப்பவற்றை எடுத்து வீதியில் கொட்டிவிட்டுச் சென்றார்.
கடைக்காரன் வெளியூரிலிருந்து வியாபாரம் செய்ய வந்தவன். சேஷாத்திரி சுவாமிகளின் பெருமை அறியாத அந்த முரடன் காவல் துறையில் புகார் செய்தான். போளூரிலிருந்து திருவண்ணாமலைக்கு திருவிழா பணிசெய்ய வந்த இன்ஸ்பெக்டர், மகானின் பெருமை அறியாமல் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்.
அடுத்த அரைமணியில் அந்தச் செய்தி ஊர்முழுவதும் பரவி, மக்கள் கொதிப்படைந்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சுவாமிகளை வெளியே விடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் பிடிவாதமாக திருவிழா முடிந்தபிறகே சுவாமிகளை வெளியே விடமுடியும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். சுவாமிகளுக்கு கெடுதல் செய்தால் பெரும் அபாயத்தைச் சந்திக்க வேண்டிவரும் என்று மக்கள் எச்சரித்தனர். இன்ஸ்பெக்டர் அதை இலட்சியம் செய்யவில்லை.
ஆனால் அடுத்த அரைமணியில் போளூரிலிருந்து அவருக்குத் தந்தி வந்தது. அவர் மனைவி கொடுத்திருந்தாள். இன்ஸ்பெக்டரின் ஐந்து வயது மகன், அறைக்குள் சென்று கதவைத் தாழ் போட்டுக் கொண்டான். “கதவைத் திறக்கத் தெரியாமல் பயந்து அழுது, மூர்ச்சையாகக் கிடக்கிறான். உடனே புறப்பட்டு வரவும்” என்று தந்தி தெரிவித்தது.
இன்ஸ்பெக்டர் அவசரமாகக் புறப்பட்டு போளூருக்குச் சென்றார். வீட்டின் முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அறையில் ஜன்னல் எதுவும் இல்லை. மேலும் கதவை உடைத்து எடுக்கமுடியாத வகையில் அந்த அறை அமைந்திருந்தது.
அந்த நிலையில் திருவண்ணாமலையிலிருந்து அவருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. அதில் மகானை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யும் படியாக மக்கள் கேட்டிருந்தனர். அவர் மனைவி இந்த விஷயத்தை அறிந்து பதறினாள். அவளுக்கு சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றித் தெரியும். “மகானின் பெருமை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டீர்கள். அந்தப்பாபம் தான் நம் மகன் இப்போது அறைக்குள் சிக்கிக் கொண்டான். அவரை முதலில் வெளியே விடச் சொல்லுங்கள்” என்று அழுதாள்.
இன்ஸ்பெக்டருக்கு தன் தவறு புலப்பட்டது. சுவாமிகளை விடுவிக்கும்படி திருவண்ணாமலைக்கு தந்தி ஒன்று கொடுத்தார். அவரே வியந்து போகும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
அடுத்த இரண்டாவது நிமிடம் அறைக்குள் கிடந்த அவருடைய மகன் மயக்கம் தெளிந்து எழுந்தான். வெளியே இருப்பவர்கள் சொல்லியதைப் புரிந்து கொண்டு, முரண்டு செய்யாமல், அச்சம் கொள்ளாமல் தானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். இது எப்படி நடந்தது? ஆச்சரியப்பட்டுப் போனார் இன்ஸ்பெக்டர். சுவாமிகளின் மகத்தான சக்தியை அறிந்த அவர் அன்றே குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்று, சேஷாத்திரி சுவாமிகளை வணங்கி தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

சேஷாத்ரி சுவாமிகள் - நோய் என்ன செய்யும்? சிறை என்ன செய்யும்? - 2

சுவாமிகள் எப்போதும் ஓர் இடத்தில் நிலையாக நிற்க மாட்டார். அரை மணிக்கு மேல் அவரை யாரும் ஒரே இடத்தில் பார்க்க முடியாது. கால் போன போக்கில் எங்காவது சுற்றிக் கொண்டே இருப்பார். மரத்தின் அடியில் அமர்ந்து ஞானம் அடைந்த புத்தரைப் போல அல்லாமல் நடந்து நடந்தே ஞானமடைந்த அதிசயப் புயல்காற்று அவர்.
கிழிந்து போன ஆடைகளும், குளிக்காத உடலும், அழுக்கடைந்த தலைமுடியும். பார்ப்பதற்கு பைத்தியக் காரனைப் போன்ற தோற்றமும் கொண்டவர் மகான் சேஷாத்திரி சுவாமிகள். இதனால் அவரைப் பற்றித் தெரியாதவர்கள், அவரை விரட்டிவிடுவதும் உண்டு. சில பண்டிதர்களும், படாடோபப் பேர்வழிகளும் ‘இந்தக் கிறுக்கனை சித்தபுருஷன் என்று மூளையில்லாத மக்கள் நம்புகிறார்களே’ என்று கேலி செய்வதும் உண்டு.
1928ஆம் ஆண்டு, திருவண்ணாமலையில் உள்ள மக்களை அம்மை நோய் தாக்கியது. பெரியம்மைநோய் பரவியதில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். நாளுக்கு நாள் அந்த நோய் கட்டுக்கடங்காமல் பெருகி மக்களை பலிவாங்கிக் கொண்டிருந்தது. சேஷாத்திரி சுவாமிகளையும் அம்மை நோய் தாக்கியது. அவர் ஓரிடத்தில் நிலையாக இருக்க மாட்டாரே! நோய் கண்ட சுவாமிகளை ஒரே இடத்தில் இருக்கும்படியாகவும், வெளியே சுற்றக்கூடாது என்றும் சுகாதார இலாகாவினர் எச்சரித்தனர்.
இதற்கெல்லாம் கட்டுப்படுபவரா நம் சுவாமிகள்? அவர் தன் வழக்கப்படியே வெளியே சுற்றித் திரிந்தார். அதனால் நோய் எல்லாருக்கும் பரவும் என்று பயந்த அதிகாரிகள் அவரை இழுத்துச் சென்று வழக்குமன்றத்தில் நிற்க வைத்தனர். நீதிபதி அவரை ஒரு மாதம் சிறையில் வைக்கும்படியாக உத்தரவிட்டார். அதனால் சுதந்தரமாகத் திரிந்த பறவை கூண்டுக் கிளியாகி விட்டது.
மறுநாள் காலையில் தண்டனை வழங்கிய நீதிபதி காரில் திண்டிவனம் அருகே சென்றபோது, சேஷாத்திரி சுவாமிகள் சாலையில் ஒரு புளியமரத்தின் அடியில் நிற்பதைக் கவனித்து ஆச்சரியம் அடைந்தார். தன் உதவியாளரிடம் அது குறித்துப் பேசும் போது, திருவண்ணாமலை நகைக்கடை செட்டியார் இராமசுவாமி என்பவர் அங்கே வந்தார். சுவாமிகளைக் கண்டு வணங்கினார். நீதிபதியிடம் அவர் மகானின் பெருமைகளைக் கூறினார்.
அவற்றை நம்பாத நீதிபதி தன் உதவியாளரை அனுப்பி சிறையில் சேஷாத்திரி இருக்கிறாரா? என்று பார்த்து வரும்படியாகச் சொல்லி அனுப்பி வைத்தார். மகானைக் கண்காணிக்க அவர் அங்கேயே தங்கிவிட்டார்.
“மகான் சேஷாத்திரி சுவாமிகளை யாராலும் சிறையில் அடைக்க முடியாது. அவர் பெருமையை அளவிட முடியாது” என்று செட்டியார் நீதிபதியிடம் எடுத்துக் கூறினார். நீதிபதி அவர் சொல்வதைக் கேட்கவில்லை. எனவே செட்டியார் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் சிறைக்குச் சென்ற உதவியாளர், பூட்டியிருந்த சிறைக்குள்ளே சுவாமிகள் கண்களை மூடியவண்ணம் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அச்சத்தால் வெளிறிப்போன முகத்தோடு மரத்தின் அடிக்கு வந்து நீதிபதியிடம் நடந்ததைச் சொன்னார். அப்போதும் நம்பாத நீதிபதி விரைந்து வந்து சிறைக்குள் பார்த்தார். சுவாமிகள் சிறையில் நின்றிருந்தார்.

மகானின் பெருமையை உணர்ந்த நீதிபதி, அவரை விடுதலை செய்து, தான் செய்த தவறுக்காக மன்னிக்கும்படியாகவும் வேண்டிக்கொண்டார். சுவாமிகள் மௌனமாக சிறையிலிருந்து வெளியேறினார்.

மகான் சேஷாத்ரி சுவாமிகள்! - 1

சேஷாத்திரி சுவாமிகள் வரதராஜன், மரகதம் தம்பதிக்கு 1870ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள் 22ஆம் தேதி மகனாகத் தோன்றினார். சிறு குழந்தையாக இருக்கும் போதே சில சித்து விளையாடல்களை சேஷாத்திரி சுவாமிகள் நடத்தியிருக்கிறார்.
திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமிகள் ஒரு நாள் கடைவீதியில் வந்து கொண்டிருந்தார். சிறு வியாபாரிகளும் பெரும் வியாபாரிகளும் அவர் தனது கடைக்குள் நுழைய மாட்டாரா? என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். சுவாமிகளின் கரம் ஒரே ஒரு முறை கடைப்பொருள்களை ஸ்பரிசித்தது விட்டால் போதும், அவ்வளவுதான். அத்தனை பொருள்களும் அன்று மாலைக்குள் விற்றுத் தீர்ந்துவிடும். நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு வியாபாரம் நடந்து பணம் குவிந்து விடும். அதனால் தான் வியாபாரிகள் அவரைக் கடவுளைப் போல எண்ணி எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
சுவாமிகள் லேசுப்பட்டவரல்லர். அவ்வளவு எளிதில் ஏதோ ஒரு கடைக்குள் நுழைந்து விடமாட்டார். நல்ல குணமும், நேர்மையும் கொண்ட வியாபாரிகளின் கடைக்குள் மட்டுமே அவர் விஜயம் செய்வார். அவ்வாறே அன்றும் கடைவீதியின் தொடக்கத்திலிருந்து கடைசி வரையில் அவர் நோட்டம் விட்டவாறே சென்றார்.
என்ன நினைத்துக் கொண்டாரோ ஒரு கடைக்குள் நுழைந்தார். அது முத்தியாலு செட்டியாரின் மளிகைக்கடை. சுவாமிகள் உள்ளே சென்று, ஒரு மூலையில் இருந்த பெரிய நெய் டின்னை எடுத்துத் தூக்கிக் குப்புறக் கவிழ்த்தார். நெய் தெருவில் ஓடியது. மண்ணில் கலந்தது.
செட்டியாரோ சிறிதும் கவலை கொள்ளாமல் புன்னகையோடு சுவாமிகளைப் பார்த்துப் பக்தியோடு கும்பிட்டுக் கொண்டிருந்தார். சுவாமிகள் கடையிலிருந்து வெளியெறிச் சென்றார். மறுநாளே செட்டியாருக்கு வராமல் போக்குக் காட்டிய நீண்ட நாளைய கடன் தொகை கேட்காமலேயே வந்து சேர்ந்தது. சேஷாத்திரி சுவாமிகளின் திருவிளையாடல் தான் வராத கடனை வரவழைத்துக் கொடுத்தது என்பதில் செட்டியாருக்கோ திருவண்ணாமலை வியாபாரிகளுக்கோ சிறிதளவும் சந்தேகமில்லை.