Wednesday, May 15, 2013

கபீர்தாஸ்...

 
இரப்பவன் கூவிப் பிழைக்கணும், கள்வனோ மவுனம் காக்கணும்
உழவன் மழையைக் கேட்கணும், வண்ணான் வெங்கதிர் பார்க்கணும்


மாற்று :
பிச்சைக்கு உரத்தக் குரல் நன்று, திருட்டுக்கு மவுனமே நன்று
உழுகைக்கு மழையே நன்று, வண்ணாரத் திற்குவெயில் நன்று.


அடிப்படையில் கபீர் குறிப்பிடும் நால்வரது நோக்கமும் வயிற்றுப்பாட்டை பூர்த்தி செய்து கொள்வதுதான். ஆனால் அவர்களின் தேவைகளில் தான் எவ்வளவு வித்தியாசம்.
இதன் உட்பொருள் எல்லா சாதகர்களின் நோக்கமும் இறைவனை அடைவது தான் என்றாலும் அவர்களுக்குரிய காலமும் வழிமுறைகளும் வெவ்வேறாக இருக்கும் என்பது தான்.

தவசிகள் அனைவருமே ஒரு வகையில் இல்லறத்தாரை சார்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள்தாம். வால்மீகி முனிவன் ஒரு வழிப்பறித் திருடன், மணிதாஸ் ஒரு தோட்டக்காரன், திருக்குறிப்பு தொண்ட நாயனாரோ ஒரு சலவைத்தொழிலாளி.
இவர்கள் யாவரையுமே அவர்களுக்கு உரிய காலத்தில் உரிய விதத்தில் தடுத்தாட்கொண்டு முக்தி அளித்து பெருமை படுத்த தவறவில்லை இறைவன்.

அவரவருக்கான சூழ்நிலைக்கேற்ப கடமைகள் வெவ்வேறானவை. சிறப்பாக கடமை செய்வதிலே கருத்து இருந்தால் ஞானமும் காலாகால‌த்திலே வரும். அவன் இறைச்சி விற்கும் வியாதனாக இருப்பினும் சரி அவனிடத்து செல்ல வேண்டி வழிகாட்டும் இல்லத்தரசியாக இருப்பினும் சரி ஞானவான்களாக திகழ்வார்கள்.
இவ்வாறு பல உதாரணங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மையை நம்மாழ்வர் தொகுத்து ஒரே பாடலில் சொல்லி விடுகிறார்.
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறை அவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

ஒவ்வொருவரும் படைப்பிலே மாறுபட்டு இருப்பதையும் அவர்களுக்கான மார்க்கங்கள் வெவ்வேறு என்பதை தமதமது அறிவு அறி வகைவகை என்று அழகாக அடுக்குத் தொடர் இட்டு உரைக்கிறார் ஆழ்வார் பெருமான்.

அறிவு அறி வகை வகை என்பது ஒரே குறிக்கோளுக்கு பல வகை வழிகள் இருப்பதும் ஏற்பு உடையதே என்பதையும் உணர்த்துகிறது.
அவரவர் இறையவர் குறைவிலர்’ என்பதை அதிகம் அறியப்படாத ஒரு தோட்டக்காரன் கதை மூலம் பார்போம்.
ஒரிஸ்ஸாவின் புரீ ஜகன்னாதனிடம் அளவற்ற அன்பு பூண்டவன் மணிதாஸ். படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒழுக்கத்தில் மேலானவன்.யாவரிடமும் இனிமையாக பேசுபவன் உண்மை தவறாதவன். தன் தோட்டத்தில் விளைந்த மலர்களை தொடுத்து அன்புடன் ஜகன்னாதனுக்கு சாற்றி மகிழ்ந்தவன்.
அருளாசையின் விளைவாகப் பணத்தாசை துறந்தவனானதால் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அதனால் பாட்டு சுலபமாக வந்தது. எப்போதும் இறைவன் பெருமைகளை பாடிக்கொண்டிருப்பான். பாடுவது மட்டுமல்ல தன்னை மறந்து ஆடவும் செய்வான். அப்போது அருகே இருப்பவர் யார் என்ன சொல்கிறார் என்பதெல்லாம் அவனுக்கு தெரியவே தெரியாது.
ஒரு முறை ஜகன்னாதரின் சந்நிதி முன் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு பெரும் பண்டிதரின் சொற்பொழிவைப் பற்றி கவலையின்றி பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கண்ணன் தரிசனத்தில் மெய்மறந்தான். பண்டிதருக்கு எரிச்சல் உண்டாயிற்று. அவரை அப்பால் போகச் சொல்லியும் பலன் இல்லாமல் போயிற்று. ஆரம்பத்தில் அவனை அறிந்தவர்கள் ஓரளவு முயற்சி செய்து பார்த்தும் அவனுடைய பரமார்த்திக நிலையிலிருந்து விடுபடவில்லை. ஆட்டத்தையும் பாட்டத்தையும் நிறுத்தவில்லை. கடைசியில் கூட்டம் கூடி அவனை அடித்து விரட்டினர்.

சுயநினைவுக்கு வந்த மணிதாஸுக்கு கூட்டத்தினர் மீது கோபம் வரவில்லை. ஜகன்னாதன் மேல் வந்தது. தன்னுடைய பாடல் ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை போகட்டும், தான் யார் நினைவாக பாடுகின்றனோ அவனுக்கும் கூட பிடிக்கவில்லை போலும்;இல்லாவிட்டால் அவர்களின் நடத்தையை தடை செய்திருப்பானல்லவா? அவர்களை விட்டு அடித்து துரத்தி விட்டதன் மூலம் அவனுக்கும் பிடிக்கவில்லை என்றே ஆயிற்று; இப்படி எல்லாம் நினைத்து கோபம் அதிகமாகி கோவிலை விட்டு வெளியேறி ஒரு மடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். எதுவும் சாப்பிடவில்லை.

புரீ மன்னனுக்கு இரவில் ஜகன்னாதர் கனவில் வந்து “வேந்தனே இன்றைய சாயங்காலப் பூஜை எனக்கு நிறைவளிக்கவில்லை. என் அன்பன் மணிதாஸின் பாடலைக் கேட்கவிடாமல் உன் பிரஜைகள் அவனை அடித்து துரத்திவிட்டனர். அவன் மனவலியால் உணவும் அருந்தாது கோவிலுக்கு வெளியே அமர்ந்திருக்கிறான். நீ உடனடியாக அவனை அழைத்து வா. இனிவரும் உபன்யாசங்கள் லட்சுமி மந்திரில் நடத்தப் படட்டும். என் அடியார்கள் என் தரிசனத்திலேயே சந்தோஷப்படட்டும்” என்று சொல்லி மறைந்தான். அரசனுக்கு கனவை வெறும் கனவென்று ஒதுக்க முடியவில்லை. உடனே ஆட்களை அனுப்பி மணிதாஸை கண்டு அழைத்து வரும்படி பணித்தான்.

அதே நேரத்தில் மணிதாஸின் கனவில் வந்த பெருமான் அன்புடன் தலையை வருடிக் கொடுத்து “நீ ஏன் சாப்பிடவில்லை? உனக்குத் தெரியுமா, நான் கூட இன்று சாப்பிடவில்லை. நீ பசித்திருக்கும் போது என்னால் எப்படி சாப்பிட முடியும் ? “ என்று சொல்லி மறைந்தான். கண் விழித்த மணிதாஸின் முன்னால் பிரசாதத் தட்டு நிறைய உணவு இருந்தது. மணிதாஸனும் பசியாறினான்.
அரண்மனையிலிருந்து வந்த பரிவாரம் முழுமரியாதையோடு அவனை அழைத்துச் சென்று ஜகன்னாதன் சந்நிதி முன்னே நிறுத்தி அவனுடைய பாட்டைக் கேட்டு மகிழ்ந்தது. அன்றிலிருந்து மணிதாஸின் பாடல்களுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. சொற்பொழிவுக்கான அரங்கமும் ஜகன்னாதர் சந்நிதியிலிருந்து லெட்சுமி தேவி கோவிலுக்கு மாற்றப்பட்டது.
இது தோட்டக்காரனுடைய தோட்டத்தில் (அருள் )மழை பெய்த கதை.
அவனே ஒரு பெரும் தோட்டக்காரன். வண்ண வண்ண உலகை நிர்மாணித்து காலாகாலத்தில் மழையும் வெயிலும் தந்து, மவுனமாய் பக்தர்களின் உள்ளத்தைக் கவரும் கள்வனாகி, அவர்கள் ஆடியும் அரற்றியும் உரத்து அருளுக்காக கூவுவதை வேடிக்கைப் பார்ப்பவன் !!
இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
என்னுடைச் சூழல் உளானே!

Tuesday, May 14, 2013

அன்னையும் ஆசாரியரும்.. {இதை முழுவதும் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது}


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை போன்ற ஆன்றோர் கூற்றில் முதன்முதலாகப் போற்றப்படுபவர் அன்னையே. பிறப்பு முதல் இறப்பு வரை நம்மைப் பேணிப் பாதுகாத்து வருவதில் பெரும் பங்காற்றும் அன்னையின் அன்பு இணையற்றது. மகன் தீயவனாயினும் தாய் தன் அன்பினால் அவனைத் திருத்த முயல்வாளேயன்றி ஒருபோதும் அவனுக்குத் தீங்கு எண்ணமாட்டாள். இதுவே தேவ்யபராத - க்ஷமாபனஸ்துதியில் -
(குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி)
என்றவாறு தாயின் மேன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக உலகில் ஒருவன் அல்லலுறும் போது அன்னையை நினைந்து அவளுடைய ஆறுதலை எதிர்பார்ப்பது இயல்பு என்று பாஸ்கரராயர் என்ற உரையாசிரியர் தமது லலிதா ஸஹஸ்ரநாம உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் புவியிலுள்ள அன்னையர் தமது மக்களின் துயர்துடைத்து ஆறுதலளிப்பார்களேயன்றி ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் மற்றும் ஆத்யாத்மிகமெனும் மூன்றுவித தாபங்களைப் போக்க அவர்களால் இயலாது. அவ்விதமான மூன்று தாபங்களையும் போக்க வல்லது ஜகன் மாதாவான அம்பிகையின் அருளே என்று திண்ணமாக உரைக்கிறார் -
(அநுபூதாஸ்து மாதரோ ந தாபத்ரய ஹரண-ஸமர்த்தா:
அதோ துரந்த துஃக்க ஹரணக்ஷமாஸு ஸர்வோத்தமா ஜகன்மாதா ஏவ
ஸ்வஸ்மின் தயாவத்வாபாதனாய மாத்ருத்வேன ஸ்தோதவ்யா)
ஆகவே பிறப்பு இறப்பு என்று மாறி மாறி உழலும் சக்கரத்திலிருந்து முழுமையாக விடுபட ஜகன்மாதாவின் திருவடிகளை உறுதியாகப் பற்றுவதேயன்றி வேறோர் உபாயமுமில்லை. ஜகன்மாதாவான அம்பிகையானவள் தன்னைத் துதிப்போர்களை, துதித்த மாத்திரத்தில் அவர்களுக்கு தன்னுடன் இரண்டறக் கலக்கும் மேலான நிலையை - ஸாயுஜ்யத்தை - அருள்வாள் என்று பகவத்பாதர் ஸௌந்தர்ய லஹரீயின் 22ஆவது சுலோகத்தில் கூறுகிறார் -
(ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்)
என்று ஆசார்யர், ஜீவாத்மாவானது பரமாத்மாவான ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை நிலை நாட்டியிருப்பினும் அந்தப் பரமாத்ம ஸ்வரூபத்தை உணர்வதற்கு ஸகுணப்ரஹ்ம உபாஸனை வழிவகுக்கும் என்றும், அதற்கு பக்தி ஓர் இன்றியமையாத ஸாமக்ரீயென்று விவேகசூடாமணியில் னீணீமீ]sணீஜ்ஸீ sணீனீ¢(ணீனீ! தூவீடுக்ஷீமீஸ் ரீக்ஷீமிஹ்sமி (மோக்ஷஸாதனஸாமக்ர்யாம் பக்திரேவ கரீயஸீ) என்று சொல்லப் பட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார். இவ்விதம் சுத்த சைதன்யஸ்வரூபமான நிர்குணப்ரஹ்மணை உணர ஸகுணப்ரஹ்மஸ்வரூபமாக தமக்கு உகந்த இறைவடிவங்களைத் துதிக்கிறார். பாவனோபனிஷத்தில்
(நிருபாதிக ஸம்விதேவ காமேச்வர:, ஸதானந்தபூர்ண: ஸ்வாத்மைவ பரதேவதா லலிதா)
என்று உபாதியற்ற சுத்தசைதன்யமே ஸம்வித் வடிவான காமேச்வரன், எப்பொழுதும் ஆனந்தம் நிறைந்து பரிபூர்ணமாயிருக்கின்ற தன்னுடைய ஆத்மசைதன்யத்தின் ஓர் அம்சமே பரதேவதையென்னும் லலிதாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம் மற்றும் ஸௌரம் என்ற ஆறு மதங்களை ஸ்தாபித்து அந்த தெய்வங்களுக்கான துதிகள் பலவற்றையும் இயற்றியுள்ளார். அந்த ஸ்தோத்ரப் படைப்புகளில் அம்பிகையைக் குறித்ததான சிலவற்றில் புதைந்து கிடக்கும் ஆழ்ந்த கருத்துகள் சிலவற்றை இங்கு காண்போம். பகவத்பாதரின் தேவீ ஸ்தோத்ரங்களில் முதன்மையாகத்  திகழ்வது ஸௌந்தர்யலஹரீயாகும். 103 சுலோகங்களைக் கொண்ட இந்த அரிய படைப்பு முதல் 41 சுலோகங்களுடன் ஆனந்தலஹரீ யெனும் பெயரில் முதல் பாகமாகவும், எஞ்சியிருக்கும் பாகம் ஸௌந்தர்யலஹரீ என்ற பெயரில் இரண்டாவது பாகமாகவும் பிரிக்கப் பட்டுள்ளதை உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக அருணா மோதினீ உரையாசிரியரான காமேச்வர ஸூரி அல்லது காமதேவ கவி தம் உரையில் -
(வஸ்துதஸ்து அத்ர ஆனந்தலஹரீ ஸௌந்தர்யலஹரீ இதி வ்யவஹாரேண)
என்ற மரபைக் குறிப்பிடுகிறார். இதே கருத்தை டிண்டிம உரையாசிரியரான இராமகவியும், கோபாலஸுந்தரீ, ஆனந்தலஹரீ உரையாசிரியர்களான கோபாலசுந்தரரும், கௌரீகாந்தபட்டரும் குறிப்பிடுகின்றனர். மேலும் முதல் பகுதியில் காணும் 41 சுலோகங்கள் மந்த்ர சாஸ்த்ரத்தை விவரிப்பதாகவும் இரண்டாம் பகுதி அம்பிகையின் எழிலை வர்ணிப்பதாகவும் அமைந்துள்ளன. இத்தகைய மேன்மையான ஸ்தோத்ரத்தை தம் அடியவர்களின் மேன்மைக்காக சிவபெருமானின் அவதாரமான பகவத்பாதர் அருளியுள்ளாரென்று ஆனந்தகிரி என்ற உரையாசிரியரும் தெரிவிக்கிறார். அருணாமோதினீ உரையாசிரியர் இந்த ஸ்தோத்ர காவ்யத்தின் சிறப்பை suஜ்ணீவீsழிஜ்ணீமீனீஸிஙீஹ்மீ (ஸுதாஸிந்தோர் மத்யே) என்று தொடங்கும் சுலோகத்தின் உரையில் - பகவத்பாதர் இந்த ஸௌந்தர்யலஹரீ ஸ்தோத்ரத்தை எடுத்துக் கொண்டு கயிலாயத்திற்குச் சென்றபோது அங்கு ஏற்கெனவே அத்துதியைப் பாடக்கேட்டு, தம் இதயத்தில் இத்துதியைத் தோற்றுவித்து அருள்புரிந்தவர் கயிலாயத்தில் உள்ள உமாமஹேச்வர தம்பதியே என்று உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
(பகவத்பாதா: ஸ்தோத்ரமேதத் விதாய கைலாஸம் கத்வா தத்ர ஏதாமேவ
ஸ்துதிம் பார்வதீ பரமேச்வர ஸமீபே பட்யமானாம் த்ருஷ்டவந்த: இதி ப்ரஸித்தி:)
ஸ்தோத்ரம் அல்லது வழிபாடு தமது மனத்துக்குகந்த கடவுளைக் குறித்த புற வழிபாடாக அமைவது அனைவராலும் இயன்ற ஓர் எளியமுறை. ஆனால் அதையே உட்புற வழிபாடாக தம் இதயத்தின் தஹராகாசத்தில் அமைந்திருக்கும் ஜ்யோதிஸ்வரூபத்தைக் குறித்ததாக அமையும் போது அது புலன்களைக் கட்டுப்படுத்திய துறவிகளால் மட்டுமே இயலும். இதுவே ஸமயாசாரமென்று அழைக்கப்படுகிறது. லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தில்(ஸமயாசார தத்பரா) என்ற பெயருக்கான உரையில் பாஸ்கரராயர் இவ்வாறு விளக்குகிறார் -
(தஹராகாசாவகாசே சக்ரம் விபாவ்ய தத்ர பூஜாதிகம் ஸமய இதி
ரூட்யா உச்யதே ஸச ஸர்வயோகிபி: ஜகமத்யேன நிர்ணீத: அர்த்த:)
இதயத்தின் தஹராகாசத்தில் ஸ்ரீசக்ரத்தைப் பாவித்து அதற்குச் செய்யப்படும் பூஜையே ஸமயாசாரம் என்று குறிப்பிடப்படுவதாகக் கூறுகிறார், பாஸ்கரராயர். இவ்வகையான ஸமயாசார முறையையொட்டியே ஸௌந்தர்யலஹரீ அமைந்ததாகவும் லக்ஷ்மீதரர் தம் உரையில் குறிப்பிட்டு பகவத்பாதரின் ஸமயாசார முறையில் ஆழ்ந்த புலமையையும் விவரித்துக் கூறியுள்ளார் -
(பகவத் பாதாசார்யா: ஸமயமத பாரத்ருச்வான: ஸமயாசாரப்ரவீணா: ஸமயரூபாம் பகவதீம் -
ஸ்துவந்தி ஸமயாசாரோ நாம ஆந்தரபூஜாரதி: குலாசாரோ நாம பாஹ்யபூஜாரதி: இதி ரஹஸ்யம்)
என்றும், மேலும் இதையே விவரிக்கும் போது பாஹ்யபூஜா என்னும் புறவழிபாட்டில் பூர்ஜபத்ரம் அல்லது துணி அல்லது தங்கம் அல்லது வெள்ளியாலான தகட்டில் சக்ரவடிவம் எழுதி வழிபடுவது. இதையே ஆன்றோர் கௌல பூஜையென்று அழைப்பதாகவும் கூறுகிறார் -
(பாஹ்யாகாசஜம் நாம பாஹ்யாவகாசே பீடாதௌ பூர்ஜ பத்ர சுத்த பட ஹேம
ரஜதாதி பட்டதலே லிகித்வா ஸமாராதனம் ஏததேவ கௌல பூஜேத்யாஹு: வ்ருத்தா:)
பகவத்பாதர்களும் புறவழிபாட்டினும் மேலான உட்புறமான ஆறு சக்ரங்களின் வழிபாட்டின் வாயிலாக தஹராகாசத்தில் தேவியை உபாஸிப்பதையே உணர்த்துகிறார். ஆத்மானு ஸந்தானமெனப்படும் சிவ-சக்தி வேறுபாடற்ற சுத்த சித்சக்தியான அம்பிகையை துதியின் மூலம் வர்ணிப்பதற்காகவே பகவத்பாதர் மந்த்ரங்களைக் குறிப்பிடுகிறாரென்று ஸௌபாக்யவர்த்தனீ உரை யாசிரியரான கைவல்யாச்ரமியும் தெரிவிக்கிறார் -
சிவ-சக்த்யோ: அபேதம் ஞாபயிதும் ஸகல ப்ரபஞ்ச ஸாக்ஷிண்யா: ப்ரஹ்ம –
அவினாபூத சித்-சக்தே: ஸ்துதித்வாரா மாத்ருகாதி மந்த்ரான் உத்தரதி
இதையே பாவனோபனிஷத் உணர்த்துவதாக முன்னர் குறிப்பிடப்பட்டது.
அம்பிகையை வழிபடவும் ஒருவர் ஈட்டிய நற்பலன்களே வழிவகுக்கும் என்பதை ஆசார்யர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஸௌந்தர்யலஹரியில் காணும் சுலோகங்களை விளக்கும் பொழுது உரையாசிரியர்களனைவரும் ஆசார்யரின் உத்திகளில் காணும் பொருட்செறிவையும். அவரது ஆழ்ந்த புலமையையும் போற்றியுள்ளனர். ஒவ்வொரு சுலோகத்தின் உரையிலும் சாக்த விஷயமானதும், பீஜமந்த்ரங்களைக் குறித்ததுமான பல சீறிய குறிப்புகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டாம் சுலோகத்தில் காணும் tஸீமிஹ்ணீ
(சரணா: சத்வார: - சுக்ல-ரக்த-மிச்ர-நிர்வாணா: தேஷாம் த்யான ஸ்தானானி - சுக்ல-ரக்தயோ: ஆக்ஞாசக்ரம் த்விதலம் மிச்ரஸ்ய ஹ்ருத்கமலம் நிர்வாணஸ்ய ஸஹஸ்ரதலம் த்வாதசாந்தம் சுக்லரக்தயோ: ப்ரஹ்ம-விஷ்ணூ த்யேயௌ மிச்ரே ருத்ர: நிர்வாணே ஸாக்ஷாத் பரமானந்த நிர்பர: ஸதாசிவரூப:)
என்று வர்ணித்து ப்ரஹ்மா அம்பிகையின் ரக்தவர்ணமான திருவடித்தாமரையின் துகளைக் கொண்டு உலகங்களைப் படைக்கிறார்; விஷ்ணு வெண்மையான துகளைக் கொண்டு காத்தலையும், ஹரன் மிச்ரமான துகளைக் கொண்டு அழித்தலையும் புரிகின்றனரென்று சாக்த ஸம்ப்ரதாயத்தின் அடிப்படையில் விளக்குகிறார்.
அடுத்ததாக ஸுதாஸிந்தோர் மத்யே என்று தொடங்கும் 8ஆவது சுலோக உரையில் டிண்டிம உரையாசிரியர், தியானம், 64 உபசாரங்களுடனான பூஜை மற்றும் மந்த்ரங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். ஆங்காங்கே ஆகம ரஹஸ்யங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர் உரையாசிரியர்கள். மேலும் (ஸுதா ஸிந்தோர் மத்யே) என்று தொடங்கு (குல குண்டே குஹரிணி) என்று முடியும் 10ஆம் சுலோகம் வரையிலான மூன்று சுலோகங்களில் குண்டலினியின் ஸ்வரூபம் வர்ணிக்கப்பட்டு துதிக்கப்படுகிறது. (சதுர்பி: ஸ்ரீகண்டை:) யென்று தொடங்கும் சுலோகத்தின் உரையில் ஸ்ரீசக்ரம் அதை எழுதும் முறை ஆகிய விளக்கப்பட்டுள்ளன. (முகம் பிந்தும் க்ருத்வா) என்ற சுலோகத்தின் மூலம் ஆசார்யர் அர்த்தநாரீச்வர த்யானத்தை வர்ணித்து அதன் பலனையும் குறிப்பிடுகிறார். இங்கு பெரும்பாலான உரையாசிரியர்கள் 'க்லீம்' என்ற காமபீஜத்திலுள்ள உயிரெழுத்தாகிய 'ஈம்' என்ற எழுத்தின் வடிவத்தைக் குறிப்பிட்டு வேத மந்த்ரமான யஸ்தித்யாஜ ஸசிவிதம் என்று தொடங்கும் ரிக்வேத மற்றும் தைத்திரீய ஆரண்யகத்தில் இடம் பெறும் மந்திரத்தை மேற்கோளாகக் காண்பித்து பகவத்பாதரின் கருத்தை விளக்குகின்றனர். குறிப்பாக டிண்டிம உரையாசிரியரான இராமகவி சாரதா இலிபியெனும் காச்மீரதேசத்து எழுத்துகளில் 'ஈம்' என்ற எழுத்தின் வடிவம் ஸ்த்ரீரூபமாகப் புலப்படும் என்று விளக்குகிறார் -
(அத்ர லகார ககார வர்ஜனேன நிஷ்க்ருஷ்ட ரூப மன்மத பீஜம் ஸா ஏவ மஹாவித்யா
தஸ்யா சாரதாலிபிப்ரகாரேண லேகனேன ஸ்த்ரீரூபம் ஸம்பவதி முகம் பிந்துதயா
பாதி தத் அதஸ்தாத் த்வி பிந்துகம் குசத்வயம் ததா ஞேயம் அதஸ்தாத் த்ரிகோணகம்
ஏவமீகாரம் ஸ்யாத் ஏவம் காமகலா பரா)
முன்னர் குறிப்பிட்டவாறு ஸௌந்தர்யலஹரீயின் முதல் பகுதியில் காணப்படும் சுலோகங்கள் பெரும்பாலும் மந்த்ரகர்பமாக - அதாவது மூலமந்த்ரங்களை மையமாகக் கொண்டு வர்ணிக்கப்படுவதாக இருப்பினும் பாமரமக்களின் நலன் கருதி எளிய முறையில் கடைப்பிடிக்கப்படும் நாமோச்சாரணத்தின் மகிமையையும் பகவத்பாதர் வர்ணித்துள்ளார். ராமகவி இக்கருத்தை தமது 22-ஆவது சுலோகத்திற்கான உரையில் விளக்குகிறார். “ஆகமங்களில் கூறப்பட்டுள்ள அந்தர்யாக முறைகள் கவனமிக்க மனநிலை கொண்டவர்களால் மட்டுமே பின்பற்ற இயலும். ஒவ்வொரு கணத்திலும் உலக வாழ்க்கையின் ஜ்வரத்தால் அல்லது தாபத்தால் மிகவும் அல்லல்பட்டு பக்தியொன்றை மட்டுமே ஸாதனமாகக் கொண்டு ஏதேனும் ஒரு தேவீஸ்தோத்ரத்தால் அம்பிகையைக் காண விழைவோர்க்கு உகந்த உபாயமிது”. “பவனாகிய சிவனின் துணைவியே! உன்னை வழிபடுகின்ற அடியவன் மீது கருணை நிரம்பிய பார்வையைச் செலுத்துவாய்!” எனச் சொல்லத் தொடங்கியதுமே 'பவானி த்வம்' என்ற இரு பதங்கள் முன் வந்தன. உடனே நீ அந்த அடியவனுக்கு முகுந்தனும், பிரம்மனும் இந்திரனும் தன் கிரீட ஒளிகளால் தீபாராதனை செய்கிற தனது நேரிடைக் காட்சியையளித்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறாய்' என்று உரைத்து -(ஸாலோக்ய ஸாமீப்ய - ஸாரூப்ய - ஸாயுஜ்ய) போன்ற நான்கு உன்னதமான நிலைகளையும் அழகாக விளக்குகிறார். இந்த சுலோகத்தின் மற்றொரு சிறப்பு அத்வைதக் கோட்பாடுகளுக்கு அடிப்படையான மஹாவாக்யமான “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்பதையும் விளக்குவதாக அமைந்ததுவே. வ்யாகரண ரீதியில் விளக்குங்கால் “அஹம் த்வம் பவானி” என்ற 'லோட்' உத்தமபுருஷ ஏகவசனப்ரயோகத்தால் “நான் நீயாவேன்” என்பதாகவும் பொருள் அமையும். லக்ஷ்மீதரர் இந்த சுலோகத்தின் உரையில்-
(பவானி இதி பதஸ்ய லோட் உத்தமபுருஷ ஏகவசானந்தத்வம் அவகம்ய தத்ஸாமா
மஹாவாக்ய ப்ரயோகோ அனேன ஸாதகேன னாதிகரண்யேன த்வம்பதஸ்ய அன்வயே
ப்ரயுக்த இதி மத்வா மஹாவாக்யபலம் தாதாத்ம்யம் திசதி பவதீ)
என்று குறிப்பிடுகிறார். இதுபோல் தாதாத்ம்யம் வேண்டி தியானிப்போரின் பலனை “ஸ்வதேஹோத் பூதாபி: க்ருணிபி:” என்று தொடங்கும் சுலோகத்திலும் பகவத்பாதர் வர்ணித்துள்ளார். இவ்விதமாக ஒவ்வொரு சுலோகத்தின் பொருட்செறிவும் கருத்தாழமும் உரையாசிரியர்கள் மிகவும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஸ்ரீசக்ரத்தை வர்ணித்தது போல் பகவத்பாதர் ஆறு சக்ரங்களையும் வர்ணிக்கும் பொழுது ஆசார்யர் அவரோஹக்ரமமான ஆக்ஞாசக்ரம் தொடங்கி மூலாதாரம் வரையிலான வர்ணனை அருளியுள்ளார். சுலோகம் 36-ஆவது முதல் 41-ஆவது சுலோகம் வரை ஆறு சக்ரங்களும் வர்ணிக்கப்பட்டுள்ளன. இங்கு 41-ஆவது சுலோக உரையில் லக்ஷ்மீதரர் ஸமய மார்கத்தையும் அதைப் பின்பற்றுவோரையும் விளக்கிவிட்டு பகவத்பாதர் இந்த ஸ்தோத்ரத்தில் மூலாதாரத்திலிருந்து தொடங்காமல் மாறாக ஆக்ஞாசக்ரத்திலிருந்து அவரோஹக்ரமமாக வர்ணித்ததன் நோக்கம் வேதங்களின் வசனத்தை அனுஸரித்ததுவே என்று குறிப்பிடுகிறார் -
(அத்ர பகவத்பாதை: ஆதாரகமலாதிக்ரமம் விஹாய
ஆக்ஞாசக்ராதிக்ரமேண அவரோஹக்ரமேண பூஜாப்ரகார: கதித:
அயமாசய: - ஆத்மன: ஆகாசஸ்ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ
இதி ச்ரௌதக்ரமமவலம்ப்ய அவரோஹக்ரம: உக்த:)
இங்கு கௌல மார்க்கத்தையும், திகம்பர, க்ஷபணகர்களின் உபாஸனா முறைகளைக் குறிப்பிட்டுச், சொல்லவேண்டியது ஏராளமாக உள்ளது. ஆனால் அவையனைத்தும் வேதமார்க்கத்திற்குப் புறம்பானதால் நினைத்துப் பார்க்கவும் உகந்ததல்ல என்றும் கூறுகிறார் -
(அத்ர பஹு வக்தவ்யமஸ்தி: தத்து அவைதிகமார்கத்வாத் ஸ்மரணார்ஹம் அபி ந பவதி)
ஸௌந்தர்யலஹரீயின் இரண்டாவது பாகமான 42 -முதல் 103 வரையிலான 62 சுலோகங்களில் அம்பிகையின் ஸௌந்தர்யம் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. பரமஹம்ஸ பரிவ்ராஜகரான ஆசார்யர் முற்றிலும் அனைத்தையும் துறந்தவர். அவர் ஏன் பவானியின் அழகை வர்ணிக்க முனைந்தார் என்று பூர்வபக்ஷமாகக் கேள்வியெழுப்பிய பதார்த்த சந்த்ரிகா உரையாசிரியர் அதற்கு இவ்வாறு பதிலுமளிக்கிறார் - பவானீ ப்ரஹ்மவடிவினள். ப்ரஹ்மத்தை உருவகப்படுத்துவதே பவானியின் வர்ணனை என்று -
(பவான்யா ப்ரஹ்மரூபத்வேன ப்ரஹ்மஸ்வரூப வர்ணனமேவ
பவானீ வர்ணனம் இதி ந அநௌசித்யம்)
சித்சக்தியாக அனைத்திலும் பரவிநிற்பவள் இவளேயென்று மார்க்கண்டேய, புராணமும் வர்ணிக்கிறது.
(சிதிரூபேண யா க்ருத்ஸ்னம் ஏதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்)
பகவத் பாதர் அருளிய தேவீஸ்தோத்ரங்களில் பவானீபுஜங்க ஸ்தோத்ரத்தில் பதினாறு சுலோகங்களும் ஸௌந்தர்யலஹரீயில் காணப்படும் கருத்துகளுக்கு ஒப்பானதாகவே பெரும்பாலும் உள்ளன. பகவத்பாத ஸ்தோத்ர ரத்னாவளி என்ற தலைப்பில் வெளியான நூலில் ஸ்ரீலலிதா பஞ்ச ரத்னம், கௌரீதசகம், ஸ்ரீத்ரிபுரஸுந்தர் - யஷ்டகம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டகம் பவானீ புஜங்கம், கல்யாணவ்ருஷ்டிஸ்தவம், மற்றும் ஆனந்தலஹரீ ஸ்தவம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவ மெனும் ஸ்தோத்ரத்தில் பீஜாக்ஷரங்களான க,ஏ,ஈ,ல, ஹ்ரீம்;, ஹ,ஸ,க,ஹ,ல,ஹ்ரீம்; ஸ,க,ல, ஹ்ரீம் என்ற எழுத்துகளில் தொடங்கி அவற்றை மாலையாக அம்பிகைக்கு அர்ப்பணித்துள்ளார். இங்கு காணப்படும் 'ஹ்ரீம்' என்ற பீஜாக்ஷரத்திற்கு இருக்கும் சிறப்பை ஆசார்யரின் துதிகளில் பல இடங்களில் அறியலாம். இங்கு 15-ஆவது சுலோகத்தில் - (ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேன மனுனா) என்று குறிப்பிடுவதற்கேற்ப அவரது கல்யாணவ்ருஷ்டி ஸ்தவத்திலும் தெளிவாகக் கூறுகிறார் -
(ஹ்ரீங்காரமேவ தவ நாம க்ருணந்தி வேதா:) (சு:5), என்றும்,
(ஹ்ரீம் - ஹ்ரீமிதி ப்ரதிதினம் ஜபதாம்) (சு:11), என்றும்,
(ஹ்ரீங்காரமேவ தவ நாம ததேவ ரூபம்) (சு:14), என்றும், வர்ணித்து இறுதியாக பலச்ருதியில்,
(ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேன மஹதா மந்த்ரேண ஸந்தீபிதம் ஸ்தோத்ரம் ய: ப்ரதிவாஸரம் தவ புரோ மாதர்ஜபேன் மந்த்ரவித் தஸ்ய க்ஷோணி புஜோ பவந்தி வசகா லக்ஷ்மீ சிர: ஸ்தாயினீ வாணீ நிர்மலஸூக்தி பார பரிதா ஜாகர்த்தி தீர்க்கம் வய:)
“ஹ்ரீங்காரத்தை மூன்று முறை ஸம்புடீகரணம் செய்வதாக அமைந்த இத்துதியை அன்னையே! எவனொருவன் உனது முன்னிலையில் ஒவ்வொருநாளும் ஜபிப்பானோ அவனுக்கு அரசர்களும் கட்டுப்பட்டு, நிலையான செல்வம், குறையேதுமில்லாத தெளிவான சொல்வன்மை, மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவை கிடைக்கப்பெறும்” என்று உணர்த்துகிறார். மேலும் இதே துதியில் அம்பிகையின் திருவடிகளைத் தொழுவது மிகுந்த பலனை அளிக்கும் என்பதை -
(ஸர்வக்ஞதாம் ஸதஸி வாக்படுதாம் ப்ரஸூதே தேவி த்வதங்க்ரி ஸரஸீருஹயோ: ப்ரணாம:)
என்றும் வர்ணிக்கிறார். “இறைவன் என்று ப்ரஹ்மா முதலானோரிருப்பினும் அவர்களனைவரும் ப்ரளயகாலத்தில் மறைந்து போவார்கள். அன்னையே! எவனொருவன் உனது திருவடிகளில் ஒருமுறை பணிந்து வணங்குவானோ அவன் ஒருவனே நிலையாக இருப்பான்” என்றும் “உன்னைக் குறித்து செய்யும் வழிபாட்டில் உனது மேன்மையான வடிவங்கண்டு எனது கண்களில் நீர்மல்கி களிப்படையவேண்டும் என்பதே நான் விரும்புவது” என்றும் பிரார்த்திக்கிறார்.
(ஏதாவதேவ ஜனனி ஸ்ப்ருஹணீயமாஸ்தே த்வத்வந்தனேஷு ஸலில ஸ்தகிதே ச நேத்ரே
ஸான்னித்யம் உத்யதருணாயுத ஸோதரஸ்ய த்வத்விக்ரஹஸ்ய பரயா ஸுதயாப்லுதஸ்ய) (சு:2)
இவ்விதம் ஸ்ரீசிவனின் அவதாரமாகப் போற்றப் பட்ட பகவத்பாதர் அடியவர்களின் நலன் கருதி அருளிய துதிகள் ஏராளம். சில துதிகள் அவர் பெயரில் காணப்படினும் அவற்றின் நடை மற்றும் பொருட்செறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யும்பொழுது அவை விலக்கப்பட்டுள்ளன. இங்கு கூறப்பட்டுள்ள பீஜாக்ஷரங்களனைத்தும் தகுந்த குருவின் உபதேசத்தால் மட்டுமே முறையாகப் பயிலவேண்டும். ஸ்ரீவித்யாஉபாஸனையில் நன்கு தேர்ச்சிபெற்ற தகுந்த குருவின் மூலம் உபதேசம் பெற்ற பின்னர் பயில்வதன்மூலம் தக்க பலனைப் பெற இயலும். மந்த்ரகர்பமான பல துதிகள் ஸாதகனின் வினைப்பயன்களுக்கேற்ப அமையும். அம்பிகையைத் தொழுவதும் அவரவர்களின் நற்பலன்களால் மட்டுமே இயலும் என்பதையே பகவத்பாதர், (ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருதபுண்ய: ப்ரபவதி) என்று குறிப்பிடுகிறார். பகவத்பாதர் போன்ற அவதார புருஷர்கள் தாம் ஆத்ம ஸாக்ஷாத்காரமெனும் முக்தி பெற்று, தம் ஆனந்தானுபவத்தை அனைவரும் பெற வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தில் உலகத்தோர் உய்யத் துணை புரிவார்கள் என்று அவரது விவேக சூடாமணியின் வசனம் மூலம் அறியலாம் -
(சாந்தா மஹாந்தா நிவஸந்தி ஸந்த: வஸந்தவல்லோகஹிதம் சரந்த:
தீர்ணா: ஸ்வயம் பீம பவார்ணவம் ஜனான் அஹேதுனா அன்யானபி தாரயந்த:) (சு:39)
மஹான்கள் சாந்தஸ்வரூபத்துடன் அனைவருக்கும் வஸந்தருதுபோல் நன்மை புரிந்து பயங்கரமான பிறவிப் பெருங்கடலைக் கடந்து ஏனையோரையும் எந்தவொரு பலனையும் கருதாது பிறவிப் பெருங்கடலைக் கடக்க வைப்பார்கள்.

Thursday, May 9, 2013

குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா?

கான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான்.

அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா" என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும்,

பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரப்பலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.

அப்போது பக்தனை நோக்கி மகான் சொன்னார், " இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக் கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது, இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம்" என்றார்.

உண்மையை உணர்ந்த பக்தன் மாகானின் பாதங்களை வீழ்ந்து வணங்கி சரணடைந்தான்.

Tuesday, May 7, 2013

தெய்வீக கதைகள்

ராமான்னு சொல்லு!
வெங்கடாஜலபதிக்கு ஒரே மகன். அவரது மகன் வாசுதேவனுக்கு பக்தி சிறிதும் இல்லை. துறவி ஒருவரிடம் மகனின் நிலையைச் சொல்லி, ""சுவாமி! நீங்கள் தான் அவனுக்கு வழி காட்ட வேண்டும்'' என்று வேண்டினார். 
""கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன்,'' என்றார் துறவி.
மறுநாள் வெங்கடாஜலபதியின் வீட்டுக்கு வந்து, ராம நாமம் ஜெபித்தபடி பூஜை செய்தார். வாசுதேவன் தனது அறைக்குள்ளேயே 
இருந்தான்.
இதையறிந்த துறவி, அறையை வெளிப்புறமாகப் பூட்டினார்.
உள்ளிருந்த வாசுதேவன் கதவைத் திறக்கும்படி கூச்சலிட்டான்.
""அடேய்! வீட்டிலே பூஜை நடக்குது! அதில் கலந்துகிடாமே உள்ளேயே இருக்குறியே! உனக்கு பொறுப்பிருக்கா! சரி...சரி...ராமா.. ராமான்னு பதினொரு தடவை சொல்லு... திறக்கிறேன்,'' என்றார் துறவி.
உள்ளிருந்த வாசுதேவன், ""ராமான்னு தானே சொல்லணும்...11 தடவை என்ன! 101 தடவை கூட சொல்றேன்... கதவைத் திறங்கய்யா சாமி!'' என்றான்
""அவ்வளவு லேசிலே திறக்க மாட்டேன்! தினமும் நீ ராமநாமம் சொல்லணும்! உன் விதி முடிந்து, நீ எமலோகம் சென்ற பிறகு எமன் அந்த புண்ணியத்தின் பலனைக் கேட்பான். ஆனால், நீ அதைக் கொடுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கணும். இதை நான் காரணமாத்தான் சொல்றேன்,'' என்றார். 
""இந்த சாமியாருக்கு பைத்தியம் போலும்! செத்த பிறகு, நடக்கப் போறதெல்லாம் இவருக்கு எப்படி தெரியும்? சரி..சரி..இப்போ கதவைத் திறந்தாகணும்! அவர் சொல்றதுக்கு தலையை ஆட்டி வைப்போம்,'' என சிந்தித்த வாசுதேவன், அவர் சொல்கிறபடி நடப்பதாக வாக்களித்தான்.
துறவி கதவைத் திறந்து விட்டார். காலம் கடந்தது. வாசுதேவனும் இறந்து போனான்.
எமலோகத்தில் சித்ரகுப்தர் ஏட்டைப் புரட்டி, ""பிரபு! பக்தி இல்லாத இந்த வாசுதேவன், நரகம் செல்ல வேண்டியவன். ஆனால், ஒரே ஒரு முறை நிர்ப்பந்தத்தின் பேரில் ராம நாமம் சொல்லியிருக்கிறான். அதற்கான புண்ணிய பலனை இவனிடமிருந்து தாரை வார்த்து பெற்றால் தான், இவனை நரகத்துக்கு அனுப்ப முடியும், '' என்றார்.
அப்போது தான்,"எதற்காகவும் ராம நாம பலனை எமதர்மனுக்கு கொடுக்கக்கூடாது' என்று துறவி சொன்னது அவனது நினைவுக்கு வந்தது.
"" எமதர்மனே! ராமநாம பலனை எக்காரணம் கொண்டும் தரமாட்டேன். வேண்டுமானால், என்னை நரகத்தில் இப்போதே தள்ளுங்கள்,'' என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டான். 
சித்ரகுப்தர்,""புண்ணிய பலன் இருக்க, ஒரு ஜீவன் நரகம் செல்ல முடியாது'' என்றார். 
என்ன செய்வதென புரியாத எமதர்மன் இந்திரன் உதவியை நாடினான்.
குழம்பிய இந்திரன், "" பிரம்மாவிடம் தீர்வு கேட்போம்'' என்றான்.
பிரம்மாவோ,""விஷ்ணுவிடம் இவனை ஒப்படைப்போம்'' என்றார் . 
வைகுண்ட வாசலில் நின்றபடி, "" நாராயணா! இந்த ஜீவன் அடைய வேண்டிய கதி தான் என்ன? ஒரு முறை ராமநாமம் சொன்ன இவனை என்ன தான் செய்வது? '' என ஓலமிட்டனர் அனைவரும்.
""சித்திரகுப்தன், எமதர்மன், இந்திரன், பிரம்மா, நாராயணனாகிய நான் என நம் அனைவரின் தரிசனமும் ஒன்று சேர இவனுக்கு கிடைத்ததே ராம நாமத்தின் மகிமையால் தான்! இவனை சொர்க்கத்தில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை,'' என்று நாராயணன் 
சொன்னார். வாசுதேவனுக்கு சொர்க்கத்தின் கதவு திறக்கப்பட்டது.