Friday, October 15, 2010

சாமுராயும் மரமும் - தினம் ஒரு ஸென் கதை

தன்னை உயர்வாக மதித்துக்கொள்ளக் கூடிய ஒரு சமுராய் போர் வீரன் ஸென் ஆசிரியர் ஒருவரை சந்திக்கச் சென்றான். சமுராய் போர் வீரன் தன் வீர தீரச் செயல்களால் மக்களிடத்தில் புகழும் செல்வாக்கும் பெற்றவன். ஸென் ஆசிரியரின் தோற்ற அழகினையும் இனிய பண்பும் அருள் நிறைந்த மனத்தினையும் பார்த்தவன் தீடிரென தன்னை தாழ்வு மனப்பான்மையுடன் நினைக்க ஆரம்பித்தான்.

ஆசிரியரினை நோக்கிய சாமுராய், "கொஞ்சம் நேரத்திற்கு முன்பு வரை நன்றாக இருந்த நான் திடிரென எதற்காக என்னைத் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்கிறேன்? உங்களது இருப்பிடத்திற்கு வந்ததும் ஏன் நான் என்னைத் தாழ்வாக நினைக்க வேண்டும். இதற்கு முன்பு எனக்கு இந்த மாதிரியான மனநிலை வந்ததில்லையே. நான் சாவினையே பலமுறை மகிழ்ச்சியுடன் சந்தித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஏன் நான் பயப்பட வேண்டும்?" என்று கேட்டான்.
ஆசிரியர், "பொருத்திரு. எல்லாரும் இங்கிருந்து சென்றதும் உனக்கு பதில் சொல்லுகிறேன்" என்றார்.
பலரும் ஆசிரியரைப் பார்க்க வருவதும் போவதுமாக இருந்தனர். காத்திருப்பதினாலேயே களைப்படைந்து சோர்ந்து போனான் சாமுராய். மாலையானதும் அனைவரும் சென்று விட்டனர். சாமுராய், "இப்பொழுது உங்களால் என் கேள்விக்கு பதில் அளிக்க முடியுமா?" என்று கேட்டான்.
ஆசிரியர், "வெளியே வா" என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டு திறந்த வெளிக்குச் சென்றார். அது ஒரு பௌர்ணமி நாள். தொடுவானத்திலிருந்து முழுநிலவானது மறைகின்ற கதிரவனின் ஒளிபட்டு அழகுடன் சிவந்து ஒளிர்ந்தது. "அங்கே தெரிகின்ற மரங்களைப் பார். அதோ அந்த மரமானது வானத்தை தொட்டுவிடும் உயரத்திற்கு வளர்ந்திருப்பதைப் பார். அதன் பக்கத்திலியே இன்னொரு சிறிய மரம் வளர்ந்திருப்பதைப் பார். என்னுடைய ஜன்னலின் வழியாக பல வருடங்களாக அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவைகளுக்குள் எந்த பேதமும் இருந்ததில்லை. அந்த சின்ன மரம், பெரிய மரத்தினைப் பார்த்து 'ஏன் தாழ்ந்து போனவனாக என்னை நினைத்துக் கொள்கிறேன்?' என்று ஒரு பொழுதும் கேட்டதில்லை. இது சிறிய மரம், அது பெரிய மரம், ஏன் அவைகளுக்குள் காதோடு காதாக குசுகுசுவென பேசியதை என்னால் ஒரு நாளும் கேட்க முடியவில்லை?" என்றார்.

சாமுராய், "ஏனேன்றால் அவைகள் தங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை"

ஆசிரியர் சாந்தமான குரலில், "நீ என்னிடம் பதிலினை எதிர் பார்க்க வேண்டாம். உனக்கே பதில் தெரிந்திருக்கிறது" என்றார்.

No comments:

Post a Comment