Saturday, October 16, 2010

விசித்திரமான துறவி - தினம் ஒரு ஸென் கதை

ஓபாகு ஸென் பிரிவினைச் சேர்ந்தவர் ஸென் துறவி ஏன்சூ. மரபுகளை ஏற்றுக் கொள்ளாத விசித்திரமான துறவி. தனியாக வசித்தார். ஒரிடத்தில் தங்கியிருக்க மாட்டார். எங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கு செல்வார். என்ன செய்ய வேண்டும் என்று பிரியப் படுகிறாரோ அதைச் செய்வார்.

ஒரு சமயம் ஏன்சூ ஜப்பானின் பழைய தலை நகரான கியோடோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினைச் சந்திக்கச் சென்றார். ஏதோ ஆரவரத்தில் சிந்தனை வயப்பட்டவராக தான் எங்கு செல்கிறோம் என்பதினையே மறந்து விட்டார் ஏன்சூ. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தவர், ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, "இந்த வீட்டிற்கு தான் ஏன்சூ வருவதாக கூறியிருந்தாரா?" என்று ஒவ்வொருவரையும் கேட்கலானார்.

மற்றொரு சமயம், ஒரு புத்தகத்திற்கு முகவுரை எழுதச் சொல்லி ஏன்சுவிடம் ஒருவர் கேட்டுக் கொண்டார். ஏன்சூவும் அவருடைய கோரிக்கையினை ஏற்று முகவுரையினை எழுதிக் கொடுத்தார். அந்த முகவுரைத் தாளில் இருந்த மோசமான தெளிவில்லாத கிறுக்கல் கையெழுத்தினைப் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. தெளிவில்லாத கையெழுத்தினைக் ஏன்சூவிடம் காட்டி அது என்ன என்று கூறுமாறு எழுதச் சொன்னவர் கேட்டார்.

ஸென் துறவியான ஏன்சூ மறுபடி மறுபடியும் தான் எழுதியதைப் படித்துப் பார்த்தார். ஏதோ கண்டு பிடித்தவராக முடிவில் "என்னாலும் இதனை படிக்க முடியவில்லை. என்னுடைய மாணவர்களில் ஒருவன் என்னுடையக் கையெழுத்தினைப் படிப்பதில் கெட்டிக்காரன் - ஏன் நீங்கள் அவனிடம் காட்டி என்ன எழுதியிருக்கிறேன் என்றுக் கேட்கக் கூடாது" என்றார்.

No comments:

Post a Comment