Wednesday, April 18, 2012

இக்காயத்தினைக் கோயிலாக உணருங்கள்....

எலும்புகளாலும் தசைகளாலும் ஆன இந்த கூட்டின் மீது உள்ள அபிமானம் நீங்காத வரையில் நான் எப்படி சிவனாக முடியும்.?
இறையை அறிவதற்கே இவ்வுடல் இறையால் ஈயப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் ஒரு இடத்தில் இக்காயத்தினைக் கோயிலாக உணருங்கள் என்பார்.

காயமே கோயிலாகக்
கடிமனம் அடிமையாக‌
வாய்மையே தூய்மையாக‌
மனமணி இலிங்கமாக‌
நேயமே நெய்யும்பாலா
நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப்
போற்றவிக் காட்டினோமே.

இன்னொரு இடத்தில் மறுமுறையும் அப்பர் பெருமான் சொல்வார்:

உடம்புஎனும் மனை அகத்துள்
உள்ளமே தகளியாக‌
மடம்படும் உணர் நெய் அட்டி
உயிரெனுந் திரிமயக்கி
இடர்படு ஞானத் தீயால்
எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை
கழல் அடி காண லாமே.

இவை ஒரு புறம் இருக்க, இன்னுமோர் உரத்த சிந்தனை
எனக்கு வருவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுதமுடியும் ?

சுவரை இடித்துவிட்டோ அல்லது காயப்படுத்திவிட்டோ அதில்
சித்திரம் வரைவது சாத்தியமோ ?
ஆகவே உடலை வருத்துவதில் பயனில்லை. வருத்துவதால்
ஞானம் பிறக்குமா ! ஆதலால், உடலைப் பேணுவதின் மூலம்
உள்ளத்தைப் பேணவேண்டும். அதே சமயம், எது எது இவ்வுடலின்
அன்றாட வாழ்வுக்கு ( இதை continued and imperilled existence
எனப் பொருள் கொள்க ) தேவையானவற்றிக்கும் மேலாக எதிலும்
கொள்ள நேரும் பற்றினைத் தவிர்த்தால் மட்டுமே இறையின் பால்
கருத்தும் கவனமும் ஏற்படும்.

எனவே தான் கபீரும் ஒரு இடத்தில்,
ஆண்டவனே ! எனக்கு இத்தனை மட்டும் தாருங்கள் !
எதனால், நானும் பசித்து இருக்கமாட்டேன், என் வீட்டுக்கு வரும்
சாதுக்களும் பசித்து இருக்கமாட்டார் என்றார்.

உபவாசம், பசித்திருத்தல் எல்லாமே உடலை, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் சாதனங்கள். பசித்து உண் என்பார்கள். பசி எடுக்கும்போது தான் பசித்தும் புசிக்க ஒன்றும் இல்லா மக்களின் துன்பம் தெரிகின்றது. அவர்தம் இன்னலைப் போக்கும் வழிகளை நாட முடிகிறது.

No comments:

Post a Comment