Friday, September 20, 2013

கபீர் இன்னொரு வகையான பறவை உதாரணத்தை எடுத்துக் கொள்கிறார்.

 இறையே! இன்னொரு அந்தியும் சாயுதே, புலம்பும் ஒரு சக்வி
பொறையே துக்கு சக்வா, போவோம் இருளில்லா தொருபுவி
(பொறை ஏதுக்கு= பொறுமை எதற்காக)
சக்வா ஆண்பறவை, சக்வி பெண்பறவை. வடநாட்டில் இக்காதல் பறவைகளை வைத்து இப்போதும் கவிதைகள் எழுதுவோர் உண்டு. ஒரு சாபத்தினால் மண்ணுலகில் பிறந்த தேவலோகத்தை சேர்ந்த இருவரைப் பற்றிய கதை. சாபத்தின்படி பறவைகளாகப் பிறந்த இருவரும் பகல் முழுவதும் சேர்ந்திருக்கலாம். அந்தி சாய்ந்ததும் அவைத் தனித்தனியே இரவை கழிக்க வேண்டும். (சேர்ந்திருந்தால்.....ஒரு வேளை சாப விமோசனம் தள்ளிக் கொண்டே போயிருக்குமோ என்னவோ). அந்த தனிமை பெரிதும் வாட்டுகிறது சக்வியை. இருளே இல்லாத ஒரு உலகம் இருந்து விட்டால் பின்னர் பிரிவு ஏது? ஆகையால் அத்தகைய உலகத்திற்கு அழைத்துச் செல்லும்படி சக்வா-வை வேண்டிக் கொள்கிறது சக்வி.
கபீரின் ஆன்மா (நமக்காகவும் சேர்த்து) இறைவனை நோக்கி சொல்லும் வேண்டுதலாக இதைக் கொள்ளலாம்.
உலகில், அஞ்ஞான இருளில் நாம் உள்ளளவும் இறைவன் நம்மை விட்டு விலகியே இருக்கிறான். அந்த அஞ் ஞானத்தை விலக்கி நம்மை ஞானத்திற்கு இட்டுச் செல்வதும் அவன் கையிலே உள்ளது. ஆனால் அதற்கான மனப் பக்குவம், ஏக்கம் நம் உள்ளத்தில் இல்லாத போது அவனும் சும்மா இருந்து விடுகிறான். கபீரைப் போல ஞானிகள் சக்வியின் மன நிலையை அடைந்து பரிதவிக்கின்றனர். ஞானமெனும் விடியலை எதிர் நோக்கி நேரத்தை கழிக்கின்றனர். வாழ்க்கையில் வேறெதுவும் ருசிப்பதில்லை அவர்களுக்கு. உலக விஷயங்கள் என்னும் இருளை வெறுத்து எப்பொழுதும் ஞான ஒளியான இறையின்பத்திலே திளைத்து இருக்க வேண்டுகின்றனர்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் காளியிடம்’ உன் காட்சி கிடைக்காமல் இன்னொரு தினமும் வீணானதே’ என்று புலம்புவதுண்டாம்.
ஆனால் நமது நிலையோ முண்டக உபநிஷத்தில் குறிப்பிடப்பெறும் பறவையை ஒத்து உள்ளது.
அதில் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா தொடர்பை விவரிக்கையில் ஒரு மரத்தில் வசிக்கும் இரு பறவைகளுக்கு ஒப்பிடப் பட்டுள்ளது. இதில் ஒன்று அமைதியாக இருந்து இன்னொன்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.இன்னொன்று அமைதியற்று கிளைகளுக்கு இடையே இங்குமங்குமாய் மாறி மாறி பறப்பதும், பழுத்த பழங்களையும் பழுக்காத காய்களையும் கொத்துவதும் துப்புவதுமாய் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கும். இதுவே அல்லவோ நமது நிலை.
இந்த இயலாமையை அழகாக நம் கண்முன் தாயுமானசுவாமிகள் நிறுத்துகிறார்...

.......தமியனேற்கு அருள் தாகமோ
சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு......
.....................................................யோகமார்க்க
சித்தியோ வரவில்லை சகச நிட்டைக்கும்
என்சிந்தைக்கும் வெகுதூரம், நான்
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாளெந்தநாள்இந்நாளில் முற்றுறாதோ
இகபரம் இரண்டிலும் உயிரினுக்கு உயிராகி
எங்குநிறை கின்ற பொருளே (6)

No comments:

Post a Comment