Tuesday, October 30, 2012

குரு பெருமை

குரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது வாழ்க்கையின் பெரும் பகுதி வாராணசி எனப்படும் காசியிலியே கழிந்தது. இயல்பிலேயே அவரது மனம் இறைவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற உண்மையை உணர்ந்திருந்தது. அவருக்கு குருவின் அவசியமும் புரிந்திருந்தது. ராமானந்தரின் முற்போக்கான கருத்துகளும், மனத்தூய்மையையும் கண்ட அவர் அவரையே மனத்தால் குருவாக வரித்து விட்டார். அவரிடம் மந்திர உபதேசம் பெறுவது எப்படி ? அவரோ ஆழ்ந்த இந்து. இவரோ முற்றிலும் வேறு சமய நம்பிக்கை உடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர். . அவரை அணுகி எவ்வாறு கேட்பது ?

கபீர் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். உத்தமர்கள் வாயில் எப்போதும் இறைநாமமே இருக்கும் ஆதலால் அவர்கள் எதிர்பாராது நிகழும் போது கூட அதுவே வெளிப்படும். (காந்திஜி சுடப்பட்ட நிலயிலும் அவர் சொன்னது "ஹே ராம்" ). இதை உணர்ந்த கபீர் ஒரு நாள் ராமானந்தர் கங்கையில் அதிகாலையில் நீராடி வரும் பொழுது படித்துறையின் ஒரு படியில் குறுக்கே படுத்து விட்டார். இருள் விலகாத நிலையில் தெரியாமல் கபீரை மிதித்து விட்டார் ராமானந்தர். அனிச்சையாக "ராம் ராம்" என்று சொல்லிக் கொண்டே அவர் காலை பின் வாங்கிக்கொண்டார். உடனே கபீர் எழுந்து அவரை வணங்கி அவரது திருவடி தன் மீது பட்டு சொல்லப்பட்ட ராம நாமத்தையே தன் உபதேச மந்திரமாகக் கொள்ள ஆசி வேண்டினார்.

"தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு" என்பார் திருமூலர் (2049).
"குரு பரிசித்த குவலயமெல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதியாமே" (2054)

என்றும் உரைப்பார். கபீருக்கு இவைகள் அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக இயல்பாகக் கூடியது. அதை புரிந்து கொண்ட ராமானந்தரும் அவரை தம் சீடராக ஏற்றுக் கொண்டார்.
வினோதமான சீடன். வினோத முறையில் உபதேசம். பிற்காலத்தில் ராமானந்தரின் தலையாய சீடராகக் கபீர் போற்றப்பட்டார்.

No comments:

Post a Comment