Thursday, August 22, 2013

ஒரு வாலைப்பெண்

ஓர் வாலைப் பெண்ணின் கதையைச் சொல்கிறேன். இப்பெண்ணைப் பற்றிப் பாடியவர் சென்ற நூற்றாண்டில் இருந்த முத்துக்குமாரு என்பவர்.

அப்பாடல்:

“முடிவிலாதுறை சுன்னாகத்தான்
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்து
அடைய ஓர் பெண் கொடிகாமத்தான் அசைத்
ஆனைக்கோட்டை வெளிக்கட்டுடை விட்டாள்
உடுவிலான் வரப் பன்னாலையான் மிக
உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில்
இடைவிடாதனையென்று பலாலிகண்
சோரவந்தனள் ஓர் இளவாலையே”
இப்பாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள பதினொரு ஊர்களின்
(சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை,
கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை)
பெயர்களிருக்கின்றன. ஆனால், இவற்றின் கருத்து வேறுவிதமானது.
கருத்தைப் பார்ப்போம்.
பல துறைகளையுமுடைய வெள்ளிமலைக்குத் (சுல் + நாகம் – வெள்ளிமலை)
தலைவனானவன் முந்தித் தாவுகின்ற பாதங்களையுடைய குதிரை
(கொக்கு – குதிரை) மீது வந்து குறித்த இடத்திற் சேர, ஒரு பெண் கொடி
போன்ற அழகையுடையாள், அசைந்து மார்புக்கட்டை அவிழ்த்து விட்டாள்.
நட்சத்திரக்கூட்டங்களுக்குத் தலைவனான சந்திரன் தோன்ற கருப்புவில்லை
உடைய மன்மதன் மிகுந்த கோபமடைந்தனன். கடப்ப மாலையைத் தரித்த
மார்பகத்தில், இடைவிடாதனையென்று, தனது ஆவி போன்ற கண்களிலிருந்து,
ஆனந்தக் கண்ணீர் சொரிய ஓர் வாலைப் பெண் வந்து சேர்ந்தாள்.
இதே போன்று தமிழ்நாட்டில் ஒரு புலவர் பாடியிருக்கிறார். அவர் ஊர்களின்
பெயர்களை வைத்துப் பாடவில்லை. ஒரு கிழமையிலுள்ள ஏழு நாட்களையும்
ஒழுங்காக அமைத்துப் பாடுகிறார். தமிழ்நாட்டில் “தளசிங்கமாலை” என்ற
நூலிலுள்ளது அப்பாடல்.
“ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்செவ்
வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வர
வேயுறு வெள்ளி வலை சோர, நானுன்னை மேவுதற்குத்
தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்கமே”
இப்பாடலின் பொருள்:
சூரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து
விரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச, மன்மதன் பாணமெய்ய,
தென்றல் வீச, மூங்கிலையத்த அழகிய வளையங்கள், விரக
தாபத்தினால் சோர்ந்து விழ, நான் உன்னை வந்து சேர்வதற்குத்
தாய் குறுக்கே நிற்கின்றாளே என்பதாம்.
இதில் ஒரு கிழமையின் ஏழு நாட்களும், ஒழுங்காக வந்துள்ளமை
காண்க. இது “தாய் துஞ்சாமை” என்னும் அகப்பொருட் குறையச்
சுட்டும் பாடலாகும்.
இவ்வகைச் செய்யுள்களை “நாமாந்திரிகை” என்னும் யாப்பு
வகையில் அடக்குவர்.

No comments:

Post a Comment