Wednesday, May 15, 2013

கபீர்தாஸ்...

 
இரப்பவன் கூவிப் பிழைக்கணும், கள்வனோ மவுனம் காக்கணும்
உழவன் மழையைக் கேட்கணும், வண்ணான் வெங்கதிர் பார்க்கணும்


மாற்று :
பிச்சைக்கு உரத்தக் குரல் நன்று, திருட்டுக்கு மவுனமே நன்று
உழுகைக்கு மழையே நன்று, வண்ணாரத் திற்குவெயில் நன்று.


அடிப்படையில் கபீர் குறிப்பிடும் நால்வரது நோக்கமும் வயிற்றுப்பாட்டை பூர்த்தி செய்து கொள்வதுதான். ஆனால் அவர்களின் தேவைகளில் தான் எவ்வளவு வித்தியாசம்.
இதன் உட்பொருள் எல்லா சாதகர்களின் நோக்கமும் இறைவனை அடைவது தான் என்றாலும் அவர்களுக்குரிய காலமும் வழிமுறைகளும் வெவ்வேறாக இருக்கும் என்பது தான்.

தவசிகள் அனைவருமே ஒரு வகையில் இல்லறத்தாரை சார்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள்தாம். வால்மீகி முனிவன் ஒரு வழிப்பறித் திருடன், மணிதாஸ் ஒரு தோட்டக்காரன், திருக்குறிப்பு தொண்ட நாயனாரோ ஒரு சலவைத்தொழிலாளி.
இவர்கள் யாவரையுமே அவர்களுக்கு உரிய காலத்தில் உரிய விதத்தில் தடுத்தாட்கொண்டு முக்தி அளித்து பெருமை படுத்த தவறவில்லை இறைவன்.

அவரவருக்கான சூழ்நிலைக்கேற்ப கடமைகள் வெவ்வேறானவை. சிறப்பாக கடமை செய்வதிலே கருத்து இருந்தால் ஞானமும் காலாகால‌த்திலே வரும். அவன் இறைச்சி விற்கும் வியாதனாக இருப்பினும் சரி அவனிடத்து செல்ல வேண்டி வழிகாட்டும் இல்லத்தரசியாக இருப்பினும் சரி ஞானவான்களாக திகழ்வார்கள்.
இவ்வாறு பல உதாரணங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் உண்மையை நம்மாழ்வர் தொகுத்து ஒரே பாடலில் சொல்லி விடுகிறார்.
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறை அவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

ஒவ்வொருவரும் படைப்பிலே மாறுபட்டு இருப்பதையும் அவர்களுக்கான மார்க்கங்கள் வெவ்வேறு என்பதை தமதமது அறிவு அறி வகைவகை என்று அழகாக அடுக்குத் தொடர் இட்டு உரைக்கிறார் ஆழ்வார் பெருமான்.

அறிவு அறி வகை வகை என்பது ஒரே குறிக்கோளுக்கு பல வகை வழிகள் இருப்பதும் ஏற்பு உடையதே என்பதையும் உணர்த்துகிறது.
அவரவர் இறையவர் குறைவிலர்’ என்பதை அதிகம் அறியப்படாத ஒரு தோட்டக்காரன் கதை மூலம் பார்போம்.
ஒரிஸ்ஸாவின் புரீ ஜகன்னாதனிடம் அளவற்ற அன்பு பூண்டவன் மணிதாஸ். படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒழுக்கத்தில் மேலானவன்.யாவரிடமும் இனிமையாக பேசுபவன் உண்மை தவறாதவன். தன் தோட்டத்தில் விளைந்த மலர்களை தொடுத்து அன்புடன் ஜகன்னாதனுக்கு சாற்றி மகிழ்ந்தவன்.
அருளாசையின் விளைவாகப் பணத்தாசை துறந்தவனானதால் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அதனால் பாட்டு சுலபமாக வந்தது. எப்போதும் இறைவன் பெருமைகளை பாடிக்கொண்டிருப்பான். பாடுவது மட்டுமல்ல தன்னை மறந்து ஆடவும் செய்வான். அப்போது அருகே இருப்பவர் யார் என்ன சொல்கிறார் என்பதெல்லாம் அவனுக்கு தெரியவே தெரியாது.
ஒரு முறை ஜகன்னாதரின் சந்நிதி முன் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு பெரும் பண்டிதரின் சொற்பொழிவைப் பற்றி கவலையின்றி பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கண்ணன் தரிசனத்தில் மெய்மறந்தான். பண்டிதருக்கு எரிச்சல் உண்டாயிற்று. அவரை அப்பால் போகச் சொல்லியும் பலன் இல்லாமல் போயிற்று. ஆரம்பத்தில் அவனை அறிந்தவர்கள் ஓரளவு முயற்சி செய்து பார்த்தும் அவனுடைய பரமார்த்திக நிலையிலிருந்து விடுபடவில்லை. ஆட்டத்தையும் பாட்டத்தையும் நிறுத்தவில்லை. கடைசியில் கூட்டம் கூடி அவனை அடித்து விரட்டினர்.

சுயநினைவுக்கு வந்த மணிதாஸுக்கு கூட்டத்தினர் மீது கோபம் வரவில்லை. ஜகன்னாதன் மேல் வந்தது. தன்னுடைய பாடல் ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை போகட்டும், தான் யார் நினைவாக பாடுகின்றனோ அவனுக்கும் கூட பிடிக்கவில்லை போலும்;இல்லாவிட்டால் அவர்களின் நடத்தையை தடை செய்திருப்பானல்லவா? அவர்களை விட்டு அடித்து துரத்தி விட்டதன் மூலம் அவனுக்கும் பிடிக்கவில்லை என்றே ஆயிற்று; இப்படி எல்லாம் நினைத்து கோபம் அதிகமாகி கோவிலை விட்டு வெளியேறி ஒரு மடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். எதுவும் சாப்பிடவில்லை.

புரீ மன்னனுக்கு இரவில் ஜகன்னாதர் கனவில் வந்து “வேந்தனே இன்றைய சாயங்காலப் பூஜை எனக்கு நிறைவளிக்கவில்லை. என் அன்பன் மணிதாஸின் பாடலைக் கேட்கவிடாமல் உன் பிரஜைகள் அவனை அடித்து துரத்திவிட்டனர். அவன் மனவலியால் உணவும் அருந்தாது கோவிலுக்கு வெளியே அமர்ந்திருக்கிறான். நீ உடனடியாக அவனை அழைத்து வா. இனிவரும் உபன்யாசங்கள் லட்சுமி மந்திரில் நடத்தப் படட்டும். என் அடியார்கள் என் தரிசனத்திலேயே சந்தோஷப்படட்டும்” என்று சொல்லி மறைந்தான். அரசனுக்கு கனவை வெறும் கனவென்று ஒதுக்க முடியவில்லை. உடனே ஆட்களை அனுப்பி மணிதாஸை கண்டு அழைத்து வரும்படி பணித்தான்.

அதே நேரத்தில் மணிதாஸின் கனவில் வந்த பெருமான் அன்புடன் தலையை வருடிக் கொடுத்து “நீ ஏன் சாப்பிடவில்லை? உனக்குத் தெரியுமா, நான் கூட இன்று சாப்பிடவில்லை. நீ பசித்திருக்கும் போது என்னால் எப்படி சாப்பிட முடியும் ? “ என்று சொல்லி மறைந்தான். கண் விழித்த மணிதாஸின் முன்னால் பிரசாதத் தட்டு நிறைய உணவு இருந்தது. மணிதாஸனும் பசியாறினான்.
அரண்மனையிலிருந்து வந்த பரிவாரம் முழுமரியாதையோடு அவனை அழைத்துச் சென்று ஜகன்னாதன் சந்நிதி முன்னே நிறுத்தி அவனுடைய பாட்டைக் கேட்டு மகிழ்ந்தது. அன்றிலிருந்து மணிதாஸின் பாடல்களுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. சொற்பொழிவுக்கான அரங்கமும் ஜகன்னாதர் சந்நிதியிலிருந்து லெட்சுமி தேவி கோவிலுக்கு மாற்றப்பட்டது.
இது தோட்டக்காரனுடைய தோட்டத்தில் (அருள் )மழை பெய்த கதை.
அவனே ஒரு பெரும் தோட்டக்காரன். வண்ண வண்ண உலகை நிர்மாணித்து காலாகாலத்தில் மழையும் வெயிலும் தந்து, மவுனமாய் பக்தர்களின் உள்ளத்தைக் கவரும் கள்வனாகி, அவர்கள் ஆடியும் அரற்றியும் உரத்து அருளுக்காக கூவுவதை வேடிக்கைப் பார்ப்பவன் !!
இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
என்னுடைச் சூழல் உளானே!

No comments:

Post a Comment