Friday, September 7, 2012

ஸ்ரீரகூத்தமர்

வைதம் என்ற மத்வ சித்தாந்தத்தை நிறுவிய மகான் ஸ்ரீ மத்வாச்சாரியாரின் வழிகாட்டுதலின் படி அமைந்த மடங்களில் மிகவும் சிறப்பு பெற்றது உத்திராதிமடம் ஆகும். 16ம் நூற்றாண்டில் இம்மடத்தின் அதிபதியாக ஸ்ரீரகுவர்ய தீர்த்தர் என்ற ஞானி விளங்கிவந்தார். ஒருசமயம் அவர், ஐதராபாத் சமஸ்தானத்திலுள்ள சுவர்ணவாடி என்ற சிற்றூருக்கு விஜயம் செய்தார். அவ்வூரில் வாழ்ந்துவந்த அந்தணர் சுப்ப பட்டர் தமது துணைவியார் கங்காபாயுடன் சென்று மகானை வணங்கி, தங்கள் இல்லத்திற்கு பிøக்ஷ ஏற்க வரும்படி வேண்டினார். சுப்ப பட்டர் தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாத வீடுகளில் துறவிகள் பிøக்ஷ ஏற்கமாட்டார்கள். ஆனாலும், சுப்ப பட்டர் தம்பதியர் வற்புறுத்தி வேண்டினர். கருணைக்கடலான ஸ்ரீரகுவர்யர், அவர்களின் பிøக்ஷயை ஏற்பதாகவும், அதன்பலனாக புத்திரபாக்கியம் ஏற்படும் என்றும் தெரிவித்தார். அதேநேரம் ஒரு நிபந்தனையை விதித்தார். பிறக்கும் குழந்தையை தன்னிடம் ஒப்படைப்பதாக உறுதி தர வேண்டும் என்றார். புத்திர பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்கிய கணவனும் மனைவியும் அப்படியே செய்வதாக உறுதியளிக்க, மகானும் பிக்ஷயை ஏற்று அருளினார்.
வெகு விரைவிலேயே கங்காபாய் கருவுற்றார். குழந்தை பிறக்கப்போகும் சமயம் வந்தது. பிறக்கும் குழந்தையை தரையில் படாமல், தங்கத்தட்டில் தாங்கிப்பிடிக்க வேண்டும் என்ற மகானின் உத்தரவுப்படி, தங்கத்தட்டில் ஏந்தி மடத்திற்கு எடுத்து வந்தார்கள். மடத்தில் ஸ்ரீராமபிரானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீரினால் குழந்தை கழுவப்பட்டது. ராமச்சந்திரன் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் குழந்தைக்கு கொடுக்கப்பட்டது. ஏழு வயதில் உபநயனம் தரித்து, எட்டுவயதில் சந்நியாசம் வழங்கப்பட்டது. அப்போது ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர், குழந்தைக்கு ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர் என்ற பெயரைச் சூட்டினார். ஸ்ரீரகூத்தமர் வேதம், உபநிஷத்துக்கள் எல்லாம் கற்று தேர்ந்தார். மர நிழலைகூட ஒதுக்கி பற்றற்று வாழ்ந்தார். இவரது குரு ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர் இறைவனடி சேர்ந்ததும் மடத்தின் அதிபதியானார். பல நூல்களை இயற்றினார். ஜாதி, மத வேறுபாடின்றி மக்களின் துயர் தீர்த்த ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர் திருக்கோவிலூர் அருகிலுள்ள மணம்பூண்டி என்ற புனிதமான இடத்தில் பிருந்தாவனம் அமைத்தார்.
கி.பி.1595 வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பிருந்தாவனத்தில் எழுந்தருளினார். அவரது ஆணைப்படி பூஜைகள் தினமும் சிறப்பாக நடத்தப்பட்டது. ஒரு சமயம் பெரிய ரயில் விபத்தில் தனது நாக்கின் முன்பகுதி துண்டிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் பேச முடியாமலும், சாப்பிட முடியாமலும் துன்பப்பட்டார். மருத்துவர்களும் நாக்கின் முன்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் சேர்க்க இயலாது என்று கையை விரித்துவிட்டனர். நாக்கில்லாமல் எப்படி வாழ்வது என்று கவலைப்பட்ட அவர் திருக்கோவிலூர் சென்று ஸ்ரீரகூத்தம தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கு வந்து தீபமேற்றி வலம் வந்து மன்றாடி வேண்டினர். என்ன ஆச்சரியம்! ஏழாவது நாள் அவரது கனவில் ஸ்ரீரகூத்தமர் காஷாய வஸ்ரம் தரித்த தனது கையினால் துண்டித்தநாக்கினை வைத்து தைப்பது போல் தோன்றியது. சுரீர் என்று ஒரு கணம் வலி தோன்றி மறைந்தது. கடைவாயில் சிறிது ரத்தம் வடிந்தது. நாக்கு நல்லபடியாகி விட்டது. இதில் மிக மிக அதிசயம் என்னவென்றால் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அவரது நாக்கை அடுத்தநாள் சென்று பார்த்தபோது அது அங்கு இல்லை. இப்படி பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார் ஸ்ரீரகூத்தமர்.
திருக்கோவிலூர் பிருந்தாவனத்திற்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் கொடிய கிரக தோஷங்களும், துன்பங்களும் விலகும் என்பதில் வியப்பில்லை

No comments:

Post a Comment