Showing posts with label அன்பே சிவம். Show all posts
Showing posts with label அன்பே சிவம். Show all posts

Friday, October 15, 2010

அன்புதான் இனிய மருந்து

இறைவனுடன் பொருந்தியிருப்பது ஒன்றே உண்மையான இன்பம். அந்த இன்பத்தோடு பொருந்தியிருப்பதே உண்மை வாழ்வு. அதுவே இன்ப வாழ்வாகும்.
ஒருவன் உயர் வாழ்க்கையை எய்த வேண்டுமாயின் தன்னலம் போல பிறர் நலத்தையும் கருதல் வேண்டும். பிறர் நலத்துக்காக செயல்படுதல் போற்றப்படும் உயர் தன்மையாகும்.  எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதே மனித வாழ்வின் சிறப்பம்சம் ஆகும். ஒருவனுக்கு உண்மை உயர்வு என்பது தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களுக்கும்
நன்மை செய்தலாகும்.  நாம் எல்லோரும் இறைவனுக்கு கடன்காரர்கள்.
நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவு யாவும் இறைவன் நமக்கு பிரதி பலன் கருதாமல் அளித்தவையே ஆகும்.  எல்லாம் வல்ல இறைவன் தாயினும் மிகுந்த பரிவோடு தன்னைப் பாதுகாப்பதை உணர
உணர ஒருவன் எல்லோருக்கும் அன்பு செய்வதையே சிறந்த பணியாகக் கொள்வான்.
எல்லோருடனும் அன்பு செய்யச் செய்ய அவ்வன்பினால் பயன்
பெற்றவர்களுடைய உவகையும் புகழ்ச் சொல்லும் ஒருவனுக்கு
மேலும் மேலும் அன்பு செலுத்துதற்கு ஊக்கம் அளிக்கும்.
நாம் எல்லோரும் எங்களுடைய மனப் பான்மையை உயர்த்திக் கொண்டால் அன்பு செலுத்துதல் எளிதாகும். நம் வாழ்கையில் நம் அறிவு தெளிவாய்
இருக்கும் போது பிறர்க்கு அன்பு செய்தலின் சிறப்பு நமக்கு இனிது விளங்கும்.  எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்திய
பெரியார்களைப் பின்பற்றி நடப்பதால் அன்பு செலுத்துதல் எளிதாகும்.